ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்திருந்தது. அமைச்சர்களும், திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதால் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டது. பாஜகவும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. இந்நிலையில், அதிமுக பிரமுகர் சுயேட்சையாக களமிறங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் வேட்பு மனு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 4 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அதிமுக பிரமுகரான செந்தில் முருகன், சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது வேட்பு மனுவும் ஏற்கப்பட்டுள்ளது. மொத்தமாக 55 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
திமுக ஸ்s நாதக இடையே நேரடி போட்டி நிலவும் நிலையில், அதிமுக பிரமுகர் சுயேட்சையாக களமிறங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவைச் சேர்ந்த வாக்காளர்கள், தேர்தலை புறக்கணிப்பார்களா? தங்கள் கட்சியைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர்களை ஆதரிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வேட்பு மனுவை வாபஸ் பெற நாளை மறுநாள் வரை அவகாசம் இருப்பதால், செந்தில் முருகன், மனுவை வாபஸ் பெ வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா மறைவைத் தொடர்ந்து கடந்த 2023ல் நடந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் ஓ.பி.எஸ் அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் செந்தில் முருகன்.இந்த நிலையில், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அதே நாளில் ஓ.பன்னீர்செல்வம் தனது அணியின் வேட்பாளராக செந்தில் முருகனை அறிவித்தார்.
கட்சியில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத செந்தில் முருகனுக்கு ஓ.பன்னீர்செல்வம் சீட் கொடுத்தது, அவரது அணியினர் கூட எதிர்பாராதது. இதையடுத்து, செந்தில் முருகனுக்கு கட்சியின் அமைப்புச் செயலாளர் பதவியையும் அவசர அவசரமாக வழங்கினார் ஓ.பன்னீர்செல்வம். பின்னர், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் ஓபிஎஸ் தரப்பினரை சந்தித்து, அதிமுக போட்டியிட வழிவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, தனது அணியின் வேட்பாளர் செந்தில் முருகன் போட்டியிலிருந்து வாபஸ் பெறுவார் என்று அறிவித்தார் ஓபிஎஸ்.
இடைத்தேர்தல் முடிந்ததும், ஓபிஎஸ் அணியின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்த முருகானந்தம் தலைமையில் ஓ.பி.எஸ் அணியிலிருந்த மாவட்ட நிர்வாகிகள் பலர், சேலத்திலுள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு நேரில் சென்று அவர் அணியில் இணைந்தனர். அதன் பிறகு, செந்தில் முருகனும் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார். இந்நிலையில் தான் தற்போது செந்தில் முருகன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த முறை ஓபிஎஸ்ஸால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்ட செந்தில் முருகன், இந்த முறை எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்தாலும் சுயேட்சையாக களமிறங்கி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.