நீதிபதிகள் செய்யும் வேலை தெய்வ பணி என கருதப்படுகிறது. அதுவும் பிற பணிகளைபோன்று விமர்சனத்திற்கு உட்பட்ட ஒரு பணி தான்.. நீதிபதிகளின் செயல்பாட்டை, தீர்ப்பை விமர்சிப்பது இந்தியாவில் மிகவும் குறைவு, இந்த போக்கு மாற வேண்டும்.. கோர்ட்டுகள், நீதிபதிகளின் பணிகளையும், தீர்ப்புகளையும் கூர்மையாக விமர்சிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறினார்.
திருச்சி கலையரங்கத்தில் தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழுவின் பொன்விழா கருத்தரங்கம் ஜனவரி 4ம் தேதியான நேற்று நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசும் போது, ‘‘நீதிபதிகள் செய்யும் வேலை தெய்வ பணி என நம் நாட்டில் கருதப்படுகிறது. அதுவும் பிற பணிகளைபோன்று விமர்சனத்திற்கு உட்பட்ட ஒரு பணி தான். நீதிபதிகளின் செயல்பாட்டை, தீர்ப்பை விமர்சிப்பது இந்தியாவில் மிகவும் குறைவு. இந்த போக்கு மாற வேண்டும். நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் பணிகளையும், தீர்ப்புகளையும் கூர்மையாக விமர்சிக்க வேண்டும். நீதிபதிகளுக்கு பிரத்தியேக போலீஸ் பாதுகாப்பு என்பது தேவையில்லை. இதன் மூலம் மனித ஆற்றல் விரயம் ஆகிறது.
நீதிபதியின் செயல்பாட்டை அவர் அளித்த வழக்குகளின் தீர்ப்பின் எண்ணிக்கையை வைத்து மதிப்பிட இயலாது. ஏனெனில் ஒவ்வொரு வழக்கிற்கும் விசாரணை உள்ளிட்ட நீதிமன்ற நடைமுறைக்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுகிறது. சில குற்ற வழக்குகளை விசாரிக்க மிக நீண்ட காலம் தேவைப்படுகிறது. சில நீதிபதிகள் இரவு வரை கூட நீதிமன்றத்தில் வேலை செய்கின்றனர். நீதிபதிகளுக்கு எதிராக எந்த சோதனையும் நடைபெறாது என்ற தைரியத்தில் ஏற்கனவே இருந்த 2 நீதிபதிகள் லஞ்சம் வாங்கியதாக தகவல்கள் இருக்கின்றன. நீதிபதிகள் தங்கள் பணி நேரத்தில் முழுமையாக கடமை ஆற்ற வேண்டும்’’ இவ்வாறு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்தரங்கில் பேசினார்.