புதுடில்லி சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று (ஜன.,07) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது.

டில்லி சட்டசபையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 70 தொகுதிகளுக்கும் தேர்தல் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தேதி அறிவிக்கப்படாத தருணத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறது. பிரசாரத்தின் போது கவர்ச்சிக்கர விளம்பரங்களையும், வாக்குறுதிகளையும் கூறி வாக்கு சேகரித்து வருகிறது.

பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களுடன் பிரசாரத்தில் குதித்துள்ளன. அனைத்துக் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

அதில் மதியம் 2 மணிக்கு நிருபர்களை சந்திக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் தயாராக உள்ளனர். அப்போது டில்லி சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும். அதன் பின்னர் வேட்புமனுத் தாக்கல், வேட்புமனு மீதான பரிசீலனை, மனு திரும்ப பெறுதல் ஆகிய நடைமுறைகள் தொடங்கும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal