முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அ.தி.மு.க. போராட்டத்தை ஒத்தி வைத்த நிலையில், ‘இனி எல்லா மேடைகளிலும் தி.மு.க.,வை தோலுரித்துக் காட்டப்போகிறோம்’ என்று, கோவையில் சாட்டையடி போராட்டம் நடத்திய பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை கூறினார்.
அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, இன்று காலை 10 மணிக்கு கோவை நேரு நகரில், தனது வீட்டுக்கு முன் நின்று, அண்ணாமலை தன்னை தானே சாட்டையால் ஆறு முறை, அடித்து கொண்டார். அப்போது பா.ஜ.க, தலைவர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். பா.ஜ.க,வினர் ‘வெற்றி வேல், வீர வேல்’ என கோஷம் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ‘‘ 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்து நம்முடைய அன்பை எல்லாம் பெற்ற மன்மோகன் சிங் இன்று நம்முடன் இல்லை. அவருக்கு பா.ஜ.க, சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். வரும் நாட்களில் எப்போதும், அவர் நமது நாட்டிற்கு வகுத்து கொடுத்துள்ள பொருளாதார நினைவு கொள்கையை நினைவு கூர்வோம். ஒரு தனி மனிதனுக்கு ஆட்சியாளர்கள் மீது இருக்க கூடிய கோபத்தை காட்டக் கூடிய போராட்டம் அல்ல.
கண் முன்னால் அடுத்த தலைமுறை அழிந்துது கொண்டு இருப்பதை பார்த்து கொண்டு இருக்கிறோம். கல்வியின் தரம் கீழே வர ஆரம்பித்து இருக்கிறது. போராக இருந்தாலும் கூட ஒரு பெண்ணின் மீது கை வைக்க கூடாது என்பது மண்ணின் மரபு. வரும் காலங்களில் போராட்டங்களை தீவிரப்படுத்த போகிறோம். ஆனால் இன்னைக்கு தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தொடுக்க கூடிய குற்றச்செயல்கள் ஒவ்வொரு நாட்களுக்கு அதிகரித்து கொண்டே இருக்கிறது.
எதற்காக ஆறு சாட்டை அடி? காரணம் இருக்கிறது. முருகப்பெருமானிடம் எங்களுடைய வேண்டுதலை ஆறு சாட்டை அடியாக சமர்ப்பிக்கிறோம். விரதம் இருக்கப் போகிறோம். அரசியல் பணியை செய்ய போகிறோம். ஆண்டவனிடம் முறையிட போகிறோம். எல்லா மேடைகளில் தி.மு.க., வை தோலுரித்து காட்ட போகிறோம். 3 ஆண்டுகளாக தமிழகத்தை பின்னாடி கொண்டு சென்று உள்ளனர்’’ இவ்வாறு அண்ணாமலை கூறினார்.