கடந்த இரண்டு நாட்களாக விகடன் குழுமம் வெளியிட்ட ‘எல்லோருக்கும் பொதுவானவர் அம்பேத்கர்’ எனும் நூல் வெளியிட்டு விழாவில் விஜய்யும், ஆதவ் அர்ஜுனாவும் தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தனர். இதனால் தி.மு.க. அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ‘புத்திசாலி’களுக்கு புரியும் வகையில் பதிலடி கொடுத்திருக்கிறார். தஞ்சையில் நடந்த சமூகநீதி மற்றும் பகுத்தறிவு பாசறை மண்டல கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது :-

‘‘அறிவோடு சிந்தித்து செயல்பட வேண்டும் என சொல்லி கொடுத்தது தி.மு.க. தான். படையை திரட்டி கொண்டு கொள்கை எதிரியை நோக்கி வாருங்கள் போவோம் என கூறியபோது நமக்கு பின்னால் இருந்து கொண்டு நம் மீது அம்பை விடுகிறான். கொள்கை எதிரி இதை பார்த்து சிரிப்பான் என்று குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் மைக் போட்டு உளர்கிறான்.

கிளையில் அமர்ந்து கொண்டு அடி மரத்தை வெட்டுவது போல் என்ன பேசுவது என்று தெரியாமல் ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்களை பார்க்க பரிதாபமாக உள்ளது. அவர்களுக்கும் சேர்த்து தான் தி.மு.க. உழைக்கிறது. திராவிடம் என்பது அடிமைத்தனத்தை உடைத்தது, பெண்ணடிமைத்தனத்தை கிழித்து எறிந்தது, மூடநம்பிக்கையை கிழித்து எறிந்தது.

இதையும் மீறி எவனாவது திராவிடம் என்ன செய்தது என்று கேட்டால் உன் முகத்திரையை கிழித்தது என்று கூறுங்கள். சிலர் சங்கீகளா அல்லது சங்கீகள் போர்வை போர்த்தியவர்களா அல்லது நேரடியாக, மறைமுகமாக சங்கீகளுடைய ஆதரவு பெற்றவர்களாக என்று தெரியாமல் சாம்பார், வடை, பாயாசம் என்று பேசுகின்றனர். அறிவு ஆயுதத்தை சிந்திக்க கற்று கொள்ள வேண்டும்’’ இவ்வாறு அவர் பேசினார்.

நடுநிலையுடன் செயல்படுகிறோம் என்று மார்தட்டிக் கொள்ளும் ஒரு பத்திரிகை சார்பில் நடந்த விழாவில் ஒரு அரசியல் கட்சியை தரம் தாழ்ந்து பேசுவது எந்த வகையில் நடுநிலை என்கிறார்கள்..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal