பச்சை மலையில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அதிநவீன தங்கும் விடுதிகள் மற்றும் ஜீப் லைன் பொழுது போக்கு அம்சங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருக்கக்கூடிய ஒரு பகுதியாக 527.61 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் முக்கிய சுற்றுலாத்தலமான பச்சமலை அமைந்து இருக்கிறது. இந்த பச்சமலையானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,072 மீட்டர் உயரம் கொண்டதாக இருந்து வருகிறது. பச்சமலையில் வனத்துறையின் கணக்கெடுப்பின்படி சுமார் 154 வகையான பறவை இனங்கள் வாழ்ந்து வருவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் பல்வேறு காலகட்டங்களில் இந்த வனப்பகுதியில் சுமார் 135 வகையான பட்டாம்பூச்சி இனங்கள் வெளியிடங்களில் இருந்து வந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. திருச்சி மாவட்ட விமான நிலையத்தில் இருந்து சுமார் 105 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்து இருக்கிறது. அதேபோல் திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 106 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த பச்சமலையானது அமைந்து இருக்கிறது.

இதுமட்டுமல்லாமல் இங்கு பல்வேறு சிறிய வகையான விலங்குகளும் வாழ்ந்து வருகின்றன. இதனைக்காண ஏராளமான மக்கள் இங்கு வருகின்றனர். இந்த பச்சமலையில் முக்கியமாக மழை காலங்களில் இங்குள்ள அருவிகளில் நீர்வரத்து அழகான இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்து இருக்கிறது. இந்த பச்சமலையில் சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில் கடந்த 2013-ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பச்சமலையை சூழல் சுற்றுலா திட்டத்தில் விரிவாக்கம் செய்ய அறிவித்தார்.

இந்த திட்டத்தின்படி சுமார் 2.30 கோடி ரூபாய் செலவில் அருவிகள் அமைந்துள்ள பகுதிகள் அனைத்தையும் மேம்படுத்துவது மற்றும் காட்சி கோபுரங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. பச்சமலையில் சிறுவர் பூங்கா, மர உச்சி வீடுகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான உணவகம் கட்டுதல் போன்ற பல்வேறு பணிகள் இங்கு மேற்கொள்ளப்பட்டு வந்தன. மேலும் இங்கு அரசு விடுதி ஒன்று மட்டுமே உள்ளது.

இதுமட்டுமல்லாமல் பச்சமலையில் மலையேற்றம் செய்வதற்காக ஏராளமான கல்லூரி மாணவர்கள் மற்றும் மக்கள் வருகை தருகின்றனர். கோடை காலத்திலும் இயற்கை எழில் கொஞ்சும் சூழல் நிலவி வருவதால் இங்கு நாளுக்கு நாள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக சுற்றுலா தலத்தை மேம்படுத்த தற்போது 4 கோடியே 27 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலைகளும் தொடங்கி நடைபெற்று வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

மேலும் பச்சைமலையில் உள்ள டாப் செங்காட்டுப்பட்டி என்ற ஊரில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில், தமிழ்நாடு அரசின் மூலம் டோம் வடிவிலான தங்குமிட வசதி மற்றும், ஜிப் லைன் போன்ற பொழுதுபோக்கு அம்சத்தை நிறுவுவதற்கான டெண்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு இந்த பணிகள் அனைத்தும் முடிந்தால் தமிழகத்தில் மிகப்பிரபலமான சுற்றுலாத்தலமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal