ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னரே டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினருக்கு பெரும் ஏமாற்றமாக தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. ஹரியானாவில் பாஜகவும் காங்கிரஸும் மாறி மாறி முன்னிலை வகித்து வருவதால் கடும் போட்டி நிலவுகிறது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற்றது. ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கும் அக்டோபர் 5-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.
ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலமானது யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்து கணிப்புகளில் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் என தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் தொங்கு சட்டசபைதான் அமையும் எனவும் சில கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. ஹரியானாவில் 10 ஆண்டுகள் தொடர்ந்து பாஜக ஆட்சியில் நீடித்தது. இதனால் ஹரியானா தேர்தல் முடிவுகளும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹரியானாவில் பாஜக ஆட்சியைப் பறிகொடுக்கும்; காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்பதுதான் பெரும்பாலான தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள்.
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சிதான் அமையும் என்ற எதிர்பார்ப்பில் இன்று காலை முதலே டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்தனர். ஹரியானாவில் தொடக்கத்தில் மிக அதிகமான இடங்களில் முன்னிலை வகித்தது காங்கிரஸ். ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஹரியானாவில் தற்போதைய நிலவரப்படி பாஜகவும் காங்கிரஸும் சமமான இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் கடும் போட்டி நிலவுகிறது. இதனால் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரிலும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன. இருந்த போதும் கூட்டணி கட்சி என்பதால் ஆறுதல் அடைந்துள்ளது காங்கிரஸ்.