தி.மு.க. ஆட்சி அமைந்ததிலிருந்தே அ.தி.மு.க. ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆலோசகராகவும் சவுக்கு சங்கர் செயல்பட்டதாக அவரே அவ்வப் போது கூறி வந்தார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வந்தார் சவுக்கு சங்கர்!

சவுக்கு சங்கர் கைது செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு முதல்வரை குறிஞ்சி இல்லத்தில் சந்தித்து அரை மணி நேரம் பேசியதாக யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார். இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவித்த பிறகு எஸ்.பி.வேலுமணியிடம் மிகவும் பவ்யமாக ஒரு நேர்காணலை நடத்தினார் சவுக்கு சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் அரசியல் விமர்சகரும், ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளருமான மருது அழகுராஜ் சில சந்தேகங்களை எழுப்பி, தனது வலைதளப்பத்தில் பதிவிட்டிருக்கிறார்.

மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘எடப்பாடியின் அரசியல் ஆலோசகர் குறிஞ்சி இல்லத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து இருபத்தைந்து நிமிடங்கள் பேசினேன் என்கிறார். இதனை முதலமைச்சர் இந்த நிமிடம் வரை மறுக்க வில்லை..

அப்படியென்றால் எடப்பாடியின் அரசியல் ஆலோசகர் முதல்வரிடம் பேசியது கொடநாடு வழக்கு குறித்தா..? இல்லை அந்த 4800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு பற்றியா.. ?

இல்லை வலுவாக படியளக்கும் வேலுமணியின் ஸ்மார்ட் சிட்டி சேவை குறித்தா இவை எதுவுமில்லை என்றால் அவர் எதற்காக சந்தித்தார்?

எதுகுறித்து பேசினார் யாருக்காக பேசினார் என்பது தான் எல்லோரிடத்திலும் எழும் கேள்வி..!’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal