2024 மக்களவைத் தேர்தலில் 4 கட்ட வாக்குப் பதிவுகள் முடிந்து நாளை மறுநாள் 5ம் கட்ட வாக்குப் பதிவு நடக்க இருக்கிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் 300 இடங்களில் இருந்து 400 இடங்கள் வரை பா.ஜ.க. வெற்றி பெறும் என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் முதற்கட்ட வாக்குப் பதிவு நடந்தது. அதில் பாண்டிச் சேரி உள்பட தமிழகத்தில் 40க்கு 40 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய நிலவரத்தை கூறினார்கள். அதன் பிறகு மோடியின் முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரம், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்… என கள நிலவரம் காங்கிசுக்கு சற்று சாதகமாக திரும்பியதாகச் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

பத்தாண்டு காலம் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த பாஜக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏற பாஜக முயன்று வருகிறது. பாஜகவுக்கு எப்படியாவது கடிவாளம் போட வேண்டும் என்று எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன.

1998 மற்றும் 1999 ஆகிய இரு மக்களவைத் தேர்தல்களிலும் பாஜக 182 இடங்களை பெற்றிருந்தது. இதுதான் அந்த கட்சியின் அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்த போது மோடியை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்த 2014 தேர்தலில் 282 இடங்களில் வெற்றி பெற்றது. 2019 மக்களவைத் தேர்தலில் அது மேலும் அதிகரித்து 303 இடங்களில் பாஜக தனித்து வெற்றி பெற்றது. எனவே தான் இந்த தேர்தலில் 400 இடங்களில் வெல்வோம் என்று பாஜக கூறிவருகிறது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக அணி திரண்டிருப்பது அக்கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கத்தில் 400 இடங்கள் என்று பாஜக கூறிவந்தது. ஆனால் இப்போது அது போன்ற எண்ணிக்கையை கூறாமல் முஸ்லீம்கள், சீதைக்கு கோவில் என்று பாஜக நிதானம் தவறி பேசிவருகிறது என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

கடந்த தேர்தலில் பாஜக 303 இடங்களில் வென்றது மட்டுமல்லாமல் 224 தொகுதிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. எனவே தான் அந்த கட்சியை இந்தியா கூட்டணிக் கட்சியினர் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதும் அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. கடந்த தேர்தலில் பாஜக மாநிலம் வாரியாக பெற்ற இடங்கள் குறித்து விரிவாக பார்த்தால் பாஜகவின் பலத்தை அறிந்து கொள்ள முடியும்.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் பாஜக 62 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் 40 தொகுதிகளில் 50 சதவீதத்திற்கு மேல் வெற்றி பெற்றது. குஜராத் மாநிலத்தில் 26க்கு 26 என வெற்றி பெற்றதோடு அனைத்து தொகுதிகளிலும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றது. மத்திய பிரதேசத்தில் 29 தொகுதிகளில் 28இல் வெற்றி பெற்றது. அதில் 25 தொகுதளில் 50 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகள் பெற்றது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 25 தொகுதிகளில் 24இல் வெற்றியும் 23 தொகுதிகளில் 50 சதவீததிற்கு அதிகமான வாக்குகளை பெற்றது. கர்நாடகாவில் 28 தொகுதிகளில் 25இல் வெற்றியும் 22 தொகுதிகளில் 50 சதவீததிற்கு அதிகமான வாக்குகளையும் பெற்றது. மகாராஷ்டிராவில் 48 தொகுதிகளில் 23இல் வெற்றியும் 15இல் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளும் பெற்றது. பீகாரில் 40இல் 17 தொகுதிகளில் வெற்றியும் 14இல் 50 %க்கும் அதிகமான வாக்குகளும் பெற்றது. பாஜக கூட்டணியானது அந்த மாநிலத்தில் 39 இடங்களைப் பெற்றது.

ஹரியானாவில் 10க்கு 10 என்ற கணக்கில் வெற்றி பெற்று 9 இடங்களில் 50%க்கு அதிகமான வாக்குகளை பெற்றது. இமாச்சல பிரதேசத்தில் 4க்கு 4, உத்தரகாண்ட் 5க்கு 5, டெல்லி 7க்கு 7, அருணாச்சலபிரதேசம் 2க்கு 2 என முழுவதும் கைப்பற்றியதோடு அனைத்து இடங்களிலும் 50 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்றது.

அசாம் மாநிலத்தில் 14 தொகுதிகளில் 9இல் வெற்றியும் அதில் 7 தொகுதிகளில் 50 %க்கு அதிக வாக்குகளும் கிடைத்தன. ஜார்கண்ட் மாநிலத்தில் 14 இல் 11 இடங்களும் 8இல் 50%க்கு அதிகமான வாக்குகளும் பாஜகவுக்கு கிடைத்தன. சத்தீஸ்கர் மாநிலத்தில் 11இல் 9 இடங்களும் 6இல் 50%க்கு அதிகமான வாக்குகளும் பெற்றது. மேற்கு வங்கத்தில் 42 இடங்களில் 18இல் வெற்றியும் 5இல் 50% க்கு அதிகமான வாக்குகளும் கிடைத்தன.

திரிபுராவில் 2க்கு 2ம் கிடைக்க ஒரு தொகுதியில் 50 சதவீதத்திற்கு அதிக வாக்குகள் பெற்றது. பஞ்சாப் மாநிலத்தில் 13 தொகுதிகளில் 2இல் வெற்றியும் ஒரு தொகுதியில் 50 சதவீதத்திற்கு அதிக வாக்குகளும் கிடைத்தன. கோவா 2க்கு 2, சண்டிகர் 1 க்கு 1 என வெற்றி பாஜக பக்கம் முழுமையாக வந்தது. ஜம்மு காஷ்மீரில் 6 தொகுதிகளில் 3இல் வெற்றி கிடைத்தது. 2 தொகுதிகளில் 50 சதவீதத்திற்கு அதிக வாக்குகள் கிடைத்தன.

கடந்த தேர்தல் போல் இந்த தேர்தலில் பாஜவால் எளிதாக ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றியை பெற்று விட முடியாது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். பத்தாண்டு கால பாஜக அரசின் மேல் கிளம்பும் அதிருப்தி, காங்கிரஸ் கட்சியில் காணப்படும் சற்று எழுச்சி, எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படும் விதம் ஆகியவை மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். குறிப்பாக கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்கள் தேர்தல் முடிவுகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த ஏழு மாநிலங்களில் மட்டும் 222 தொகுதிகள் வருகின்றன. இதில் கடந்த முறை பாஜக 145 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இம்முறை அதற்கு வாய்ப்பு இல்லை என்கிறார்கள். குறிப்பாக கர்நாடகாவில் பாஜகவின் உட்கட்சி பிரச்சினை, பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் அத்துமீறல் போன்றவை பாஜகவுக்கு பின்னடைவாக உள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த முறை சிவசேனாவுடன் வலிமையான கூட்டணி வைத்திருந்தது. ஆனால் இம்முறை பிளவுபட்ட சிவசேனா, பிளவுபட்ட தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தான் கூட்டணி அமைத்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் ராஜ்புத்தர்கள் விவகாரம் பெரிதாக எழுந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் அகிலேஷ், – ராகுல் கூட்டணிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் சோனியாகாந்தி உருக்கமாக பேசியது நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பீகாரில் தேஜஸ்வி யாதவ் பக்கம் பெரியளவில் ஆதரவு உருவாகிறது எனவே பாஜக மிக வலிமையாக இருந்த மாநிலங்களிலும் கூட இந்தியா கூட்டணி வலிமை பெற்றிருக்கிறது.

‘இண்டியா’ கூட்டணியினரின் பிரச்சாரம் பிரதமர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை எரிச்சல் படுத்தினாலும், இந்துக்களின் ஓட்டுக்களை முழுமையாக பெற்று பா.ஜ.க. கரைசேர வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். ஜூன் 4ம் தேதி வரை பொறுத்திருப்போம்… யார் கரையோரடப் போகிறார்கள்… யார் கரைசேர்கிறார்கள் என்பதை..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal