புதுச்சேரி உப்பளத்தில் அழகிகளை வைத்து விபசாரம் செய்த வழக்கில் கோவாவில் பதுங்கியிருந்த ரௌடி ஐயப்பனை காவல் துறையினர் கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர்.

புதுச்சேரி உப்பளம் சாலையில் உள்ள ஒரு விடுதியில் கடந்த பிப்ரவரி மாதம் முதலியார்பேட்டை காவல் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அழகிகளை அடைத்து வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது. மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 வெளிமாநில அழகிகளை காவல் துறையினர் மீட்டனர். தொடர் விசாரணையில் அவர்களை புதுச்சேரி சண்முகாபுரத்தைச் சேர்ந்த பாலாஜி (வயது 35) என்பவர் விபசாரத்துக்கு அழைத்து வந்து வாணரப்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரௌடி ஐய்யப்பனிடம் ஒப்படைத்து இருந்ததாக தெரியவந்தது.

அதன் அடிப்படையில் வில்லியனூர் ஆரியபாளையம் அய்யப்பன் (எ) மணிகண்டன் (வயது 37) உதவியுடன் ஆன்லைன் மூலமாக அழகிகளின் புகைப்படங்களை அனுப்பி வாடிக்கையாளர்களை மேற்கண்ட விடுதிக்கு அழைத்து வந்து விபசார தொழில் செய்து வந்தது தெரியவந்தது.இதையடுத்து பாலாஜி, மணிகண்டன், விடுதி மேலாளரான கோட்டக்குப்பம் சின்ன முதலியார்சாவடியைச் சேர்ந்த முத்தமிழன் (30), வாடிக்கையாளர்களாக வந்திருந்த உப்பளம் அவ்வை நகர் தினேஷ் (38), ரெட்டியார்பாளையம் லோகேஷ் (25) ஆகிய 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அழகிகளை விலைக்கு வாங்கி விபசார தொழிலை நடத்தி வந்த முக்கிய குற்றவாளியான வாணரப்பேட்டை ஐய்யப்பனை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் அவர் கோவாவில் பதுங்கி இருப்பதாக காவல் ஆய்வாளர் செந்தில்குமாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவரது உத்தரவின்பேரில் தனிப்படை காவல் துறையினர் கோவா சென்று ரௌடி ஐய்யப்பனை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal