மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தூய்மை பணியாளர் ஒருவர் சிகிச்சை அளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இல்லாத காரணத்தினால் அங்கு பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது போன்று வெளியாகியிருக்கும் வீடியோ  மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. 

நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் தங்களின் சிகிச்சைக்காக வரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில், மருத்துவப் பணிக்கு எவ்வித சம்மந்தமுமில்லாத தூய்மைப் பணியாளர்கள் சிகிச்சை அளிப்பது நோயாளிகளின் உயிரோடு விளையாடுவதற்கு சமமாகும்.

மன்னார்குடி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு என எழுந்த அடுக்கடுக்கான புகார்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படாததே சுகாதாரத்துறையில் இதுபோன்ற தொடர் சீர்கேடுகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

எனவே, இனியாவது அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை வழங்க தேவையான அடிப்படை மருத்துவ உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal