திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகள் மனோன்மணி பாஜகவில் இணைய இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் திமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் பாஜகவை வளர்ச்சி அடைய பல்வேறு திட்டங்களை பாஜக மேலிடம் திட்டம் தீட்டி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சிக்கு மாற்றாக பாஜக உள்ளதாக பிம்பத்தை கட்டமைத்து வருகிறது. எதிர்கட்சியாக உள்ள அதிமுக 3வது இடத்திற்கு சென்றுவிட்டதாகவும், தாங்கள் தான் தமிழகத்தில் எதிர்கட்சி என கூறி வருகிறது. அந்த வகையில் திமுக மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகளை பாஜகவிற்கு இழுத்து வருகிறது. அந்த வகையில் பாஜகவில் அதிமுகவை சேர்ந்த 15 முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் மாஜி அமைச்சர்கள் இணைந்தனர்.

இதே போல காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்போதைய எம்எல்ஏ விஜயதாரணியையும் பாஜகவிற்கு தட்டி தூக்கினர். மேலும் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகளை ஸ்கெட்ச் போட்டு பாஜக இழுத்து வருகிறது. அந்த வகையில் திமுகவில் இருந்தும் வி.பி.துரைசாமி, திருச்சி சூர்யா சிவா போன்று முக்கிய நிர்வாகிகளையும் இழுத்தது. இந்தநிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் அக்கட்சியின் மூத்த நிர்வாகியும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலுவின் மகள் மனோன்மணியை பாஜகவில் இணைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாஜகவிற்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வரும் டி.ஆர்.பாலு, நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாக உள்ளார். எனவே டி.ஆர்.பாலு மற்றும் அவரது மகன் டி.ஆர்.பி.ராஜாவிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் மனோன்மணியை பாஜகவில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அதில் வெற்றி கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே மனோன்மணி விரைவில் பாஜகவில் இணைவார் என்று கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal