மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தலில் களம் காண தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதில், அதிமுக தலைமையிலான கூட்டணியில், தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடலூரில் தேமுதிக சார்பில் போட்டியிடும் சிவக்கொழுந்துக்கு ஆதரவாக அதிமுக – தேமுதிக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். அப்போது அவர்,” கடலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக  வேட்பாளராக சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். அதிமுகவில் சாதாரண தொண்டர் கூட உச்சப்பட்ட பதவியில் உட்கார முடியும். அந்த வகையில் நம்மை போன்ற சாதாரண தொண்டரை இன்றைக்கு தேமுதிக பொதுச்செயலாளர், வேட்பாளராக அறிவித்துள்ளார். அவருடைய சின்னம் பம்பரம் சின்னம். பம்பரம் சின்னத்திற்கு வாக்கிளியுங்கள்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நிர்வாகி ஒருவர், சின்னத்தை தவறாக கூறிவிட்டதாக சி.வி சண்முகம் காதில் எச்சரித்தார். தவறை சுதாரித்து கொண்ட சிவி சண்முகம், ” மன்னித்துவிடுங்கள். சின்னத்தை தவறாக சொல்லிவிட்டேன். டிவி பார்த்துக் கொண்டிருந்தேன்.  நீதிமன்றத்தில் ஒரு கட்சிக்கு அடிமேல் அடி விழுந்து கொண்டே இருந்தது. அந்த ஞாபகத்தில் கூறிவிட்டேன். நம்முடைய வேட்பாளர் முரசு சின்னத்தில் நிற்கிறார்”  என்று கூறி சமாளித்தார். சி.வி சண்முகம் பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal