ஓ.பி.எஸ். மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், ‘தேர்தல் நடத்தை விதிகள் நீதிமன்றங்களுக்கு பொருந்தாது’ என கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஸ் அதிடியான உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார்.

கடந்த 2001&-2006ம் ஆண்டுகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய் துறை அமைச்சராக பதவி வகித்த ஒ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் குவித்ததாக, 2006-ல் திமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் 2009ஆம் ஆண்டு விசாரணையை முடித்து தேனி நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

அதன் பிறகு இந்த வழக்கு சிவகஹ்கை நீதிமன்றத்திற்க மாற்றப்பட்டது. 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி மீண்டும் வந்தது. அப்போது ஓபிஎஸ்ஸுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை திரும்ப பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத் துறை மனுதாக்கல் செய்யப்பட்டது. சிவகங்கை நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கில், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, வழக்கைத் திரும்பப் பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை ஏற்ற சிவகங்கை நீதிமன்றம், பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து 2012ல் சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் ஹைகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை 11 ஆண்டுகளுக்கு பிறகு தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தார். இதையடுத்து இந்த மறுஆய்வு வழக்கின் விசாரணைக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் வழக்கின் தன்மை தகுதியின் அடிப்படையிலேயே தனி நீதபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்குகளை விசாரிக்கிறார், எனவே இதில் தலையிட வேண்டும் என்றும் குறிப்பிட்டு உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு 25 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டதில் எந்த தவறும் இல்லை. மேல் விசாரணைக்கு பிறகு வழக்கை முடித்து வைக்க லஞ்ச ஒழிப்புத் துறையினர் அறிக்கை தாக்கல் செய்ததிலும் தவறு இல்லை. மேல் விசாரணையில் புதிய சாட்சிகள், ஆவணங்களை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் அரசு தலைமை வழக்கறிஞர், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆகியோரின் ஆலோசனையை பெற்ற பிறகே வழக்கை முடித்து வைக்க கோரிக்கை விடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை மனுதாக்கல் செய்தது. லஞ்ச ஒழிப்புத் துறையே முடித்து வைக்க அறிக்கை தாக்கல் செய்யும் போது ஓபிஎஸ் உள்ளிட்டோரை வழக்கில் இருந்து விடுவிக்கக் காரணம் எதுவும் தேவையில்லை என வாதம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் வழக்கை நீண்ட நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஏன் நீண்ட காலத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். மேலும் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு விசாிக்க வேண்டும் என கேட்கிறீர்களா, தேர்தல் நடத்தை விதிகள் நீதிமன்ற விசாரணைக்கு பொருந்தாது என்பது உங்களுக்கு தெரியாதா என காட்டமாக கேள்வி எழுப்பவிட்டு இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 8ஆம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal