தமிழ்நாட்டில் வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்கிறார். கோவை, திருப்பூர், மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக டெல்லியில் இருந்து 27-ந்தேதி மதியம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் வரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

பின்னர் மாலை ஐந்து மணிக்கு பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் மதுரை வருகிறார். மதுரை வீர பாஞ்சான் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்க திட்டம், கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகிறார். மறுநாள் 28-ந்தேதி காலை 8 .40 மணிக்கு காரில் மதுரை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி செல்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழா நடைபெறும் தனியார் பள்ளி மைதானம் மற்றும் இரவு தங்கி ஓய்வு எடுக்கும் பசுமலை நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மதுரை நகரில் மோடி பயணம் செய்யும் சாலைகள் மற்றும் முக்கிய பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகளை மாநில போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். மோடி வருகையையொட்டி மத்திய பாதுகாப்பு படையினரும் ஓரிரு நாளில் மதுரை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal