குளிர்காலம் முடிவுக்கு வந்து கோடைகாலம் தொடங்குவதற்கான அறிகுறியாக சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னை வானிலை மையம் சார்பில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் நேற்று பகலில் வெயில் வாட்டி எடுத்தது. இதனால் சாலையில் நடந்து சென்றவர்கள், மோட்டார் சைக்கிளில் சென்ற வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் அவதிக்குள்ளானார்கள். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேலை நிமித்தமாக வெளியில் சென்றவர்கள் வியர்வை மழையில் நனைந்தனர்.

கோடைகாலம் தொடங்குவதை உணர்த்தும் வகையிலேயே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் கூறியதாவது:- இனிவரும் காலங்களில் பனிப்பொழிவு குறைய தொடங்கிவிடும். அதிகாலை நேரத்தில் காணப்பட்ட அதிக அளவிலான பனியின் தாக்கம் இனி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். கோடைகாலம் தொடங்கப்போவதற்கான அறிகுறியாகவே வெயிலின் தாக்கம் தற்போது உணரப்பட்டு வருகிறது. இனிவரும் நாட்களில் கூடுதலாக வெயிலின் தாக்கம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal