சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையிலிருந்த ஜெயலலிதாவை ஜாமீனில் வெளியே கொண்டு வந்த பிரபல வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் இன்று அதிகாலை டெல்லியில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 95.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான ஃபாலி நாரிமனுக்கு 1991 இல் பத்ம பூஷன் மற்றும் 2007 இல் பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டன. அவர் 1971 முதல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும், 1991 முதல் 2010 வரை இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியதற்காக 2018 ஆம் ஆண்டுக்கான 19வது லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற அரசியலமைப்பு வழக்குகள் மற்றும் அவர் பல முன்னணிதலைவர்களின் வழக்குகளை வாதிட்டுள்ளார். அவர் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மே 1972- ஜூன் 1975 வரை இருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான ராஜ்யசபாவின் நியமன உறுப்பினராக 1999-2005 வரை இவர் இருந்தார்.

அக்டோபர் 17, 2014 அன்று, அவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்காக ஆஜராகி, அவருக்கு ஜாமீன் பெற்றார், அது முன்பு நிராகரிக்கப்பட்டது. 1991-96 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பதவி வகித்த காலத்தில் மாதம் ரூ1 தான் ஊதியமாக பெற்றார் ஜெயலலிதா. ஆனால் 5 ஆண்டுகால முடிவில் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ66.65 கோடி சொத்து குவித்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

1996 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு கடந்த 18 ஆண்டுகாலமாக நடந்து கடந்த 2014ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி குன்ஹா. அத்துடன் யாருமே எதிர்பாராத வகையில் இந்தியாவே அதிரும் வகையில் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார் குன்ஹா.

இந்த வழக்கில் 22 நாட்கள் சிறையில் இருந்த ஜெயலலிதா அதன்பின் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஜெயலலிதாவுக்காக மூத்த வழக்கறிஞர் ஃ பாலி நாரிமன் ஆஜராகி வாதாடினார். இந்த விசாரணையின் போது கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அனைத்து ஆவணங்களைத் தாக்கல் செய்தாக வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவிற்காக இவர் பொறுப்பேற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. ஃபாலி நாரிமன் செய்த சிறப்பான வாதங்கள் ஜெயலலிதாவின் ஜாமீனுக்கு முக்கிய காரணமாக இருந்தது.

நாரிமன் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பயிற்சியைத் தொடங்கினார். 22 ஆண்டுகள் பயிற்சி செய்த பிறகு, அவர் 1971 இல் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார், அந்த பதவியை அவர் மரணம் வரை தக்க வைத்துக் கொண்டார். இவரின் மகன் ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் இன்னொரு மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல போபால் விஷவாயு பேரழிவு வழக்கில் யூனியன் கார்பைடுக்கு ஆதரவாக நாரிமன் வாதிட்டார், அதை அவர் சமீப காலங்களில் தவறு என்று ஒப்புக்கொண்டார். நீதிமன்றத்திற்கு வெளியே பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையே சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal