2024 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. அப்போது தமிழில் வணக்கம் சொல்லியும், திருக்குறள் ஒன்றைக் கூறி உரையைத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நிகழ்ச்சி தொடங்கும்போதும் முடியும்போதும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கை புறக்கணிக்கப்படுவதாக கூறினார். மேலும் தமிழக அரசின் முரணாக இருப்பதாகவும் கூறி தனது உரையை முழுவதுமாக வாசிக்காமல் அமர்ந்தார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதன் பின்னர், அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என்றும் ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்ற தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்தார். இதனை தொடர்ந்து ஆளுநர் ஆர்என் ரவி, சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தேசிய கீதம் குறித்து ஆளுநர் ரவி பேசியது அவைக்குறிப்பில் இடம் பெறாது என்றும் தமிழக அரசின் உரையில் உள்ள கருத்துகளைத் தவிர்த்து சட்டப்பேரவையில் ஆளுநர் பேசியது அவரது சொந்தக் கருத்துகள் என்று, அந்த கருத்துக்கள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் மாளிகையின் சமூக வலைதள பக்கத்தில், சட்டசபையில் ஆளுநர் பேசியது வீடியோவாக வெளியிடப்பட்டது. தமிழக சட்டபேரவையில் ஆளுநர் பேசியதை சப்-டைட்டிலுடன் வீடியோவாக வெளியிட்டது ராஜ்பவன். சட்டமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை வெளியிடக்கூடாது என்பது சட்டமன்ற விதி. விதியை மீறி பத்திரிகை, ஊடகங்களில் வெளியிட்டால் அது அவை உரிமை மீறலாகக் கருதப்படும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal