‘தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பும் வேலையை பாருங்கள். கூட்டணி குறித்து நான் பார்த்துக்கொள்கிறேன்’ என தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் ஸ்பேசில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்;- திரைப்படத்துறையில் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் தனது குடும்ப ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். குடும்ப நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி, பிற நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களுக்கு சிறப்பு அனுமதி மறுக்கப்படுகிறது. திரைப்படத்துறையில் அதிகார துஷ்பிரயோகத்தை திமுக கைவிட வேண்டும்.

திமுக அரசு பொய்களால் கட்டப்பட்ட மணல் கோட்டை. ஒரு துண்டுச்சீட்டு அளவுக்கு கூட வாக்குறுதியை நிறைவேற்றாமல் 100 சதவிகிதம் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக ஸ்டாலின் பச்சை பொய் சொல்கிறார். சுய விளம்பரத்திலும் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதிலும், மக்களை ஏமாற்றுவதிலும் நம்பர் ஒன் முதல்வர் ஸ்டாலின் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

மேலும், பேசிய அவர் தென்மாவட்டங்களில் அதிமுகவை பலப்படுத்த வேண்டும். கட்சிய் பலப்படுத்தும் பணியை பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டும். செப்டம்பர் 30ம் தேதி தேவர் குருபூஜைக்கு நேரில் வந்து மரியாதை செலுத்த உள்ளேன் என தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன். திமுக அரசை வீட்டு அனுப்ப வேண்டும். அதற்கான வேலையை மட்டும் அதிமுக தொண்டர்கள் நீங்கள் பாருங்கள் என்றார்.

தமிழ்நாட்டில் பல பிரச்சனையை வைத்து கொண்டு இந்தியா கூட்டணி அமைத்து நாட்டை காப்பாற்ற போகிறேன் என முதல்வர் ஸ்டாலின் கிளப்பிவிட்டார். அதிமுக கூட்டணியைப் பார்த்து உங்களது பிரதமர் வேட்பாளர் யார் என்று ஸ்டாலின் கேட்கிறார். நான் அவரை பார்த்து கேட்கிறேன் ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று உங்களால் சொல்ல முடியுமா? என எடப்பாடி பழனிசாமி காட்டமாக கேள்வி எழுப்பினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal