அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜுன் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். பிறகு காவேரி மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. பிறகு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்தும் விசாரித்தனர். பிறகு மறுபடியும் சிறையிலேயே அடைக்கப்பட்டார்.

செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு 2 மாதங்களாகும் நிலையில், அவரது நீதிமன்ற காவல் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. முதலில், ஜுன் 14-ந்தேதி கைது செய்யப்பட்டவுடன் அடுத்த 14 நாட்கள் அவரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி முதல் நீதிமன்ற காவல் ஜுன் 28-ந்தேதி வரை என்று உத்தரவிட்டது. 2-வது முறையாக ஜூலை 12 வரை காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டது.. பிறகு, ஜூலை 26-ந்தேதி வரையில் 3-வது முறையாக செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.

பிறகு ஆகஸ்ட் 11-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவலை பிறகு ஆகஸ்ட் 25-ந்தேதி வரை நீட்டிக்க உத்தரவிடப்பட்டது. பின்னர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு விசாரணை எம்பி, எம்எல்ஏக்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு, வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் அடுத்தடுத்து ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலை செப்டம்பர் 29-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார்.

அந்தவகையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 6-வது முறையாக நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றுடன் அந்த காவலும் முடிவடைகிறது. எனவே, மீண்டும் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார் செந்தில் பாலாஜி. செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் இழுபறியாகி வருகிறது.. “நீங்கள் ஏன் பாஜகவில் இணையக் கூடாது என்று செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை கேட்டுள்ளது என்று ஜாமீன் கோரிய வழக்கில், அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்திருந்ததும், இதற்கு நீதிமன்றத்திலேயே அமலாக்கத்துறை உடனடியாக மறுப்பு தெரிவித்ததும் மிகுந்த பரபரப்பை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக, புழல் சிறையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார் செந்தில் பாலாஜி. இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal