‘என்றென்றும் எடப்பாடியார் வழியில் பயணிப்பேன்…’ என்று அ.தி.மு.க.வின் மாநில ஐ.டி.விங் செயலாளர் ராஜ் சத்தியன் அறிவித்திருக்கிறார்.

அதிமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவு செயலாளராக வி.வி.ஆர். ராஜ் சத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில் நுட்பப்பிரிவு நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக புது நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதில் அதிமுக தகவல் தொழில் நுட்பப்பிரிவின் தலைவராக சிங்கை ஜி.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவு செயலாளராக வி.வி.ஆர். ராஜ் சத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுக ஐடி பிரிவு இணைச் செயலாளர்களாக கோவை சத்யனும், சி.டி.ஆர் நிர்மல் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், அதிமுக ஐடி பிரிவு துணைத் தலைவர்களாக ராஜராஜசோழனும், கௌரிசங்கரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுக ஐடி விங் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜ் சத்யன் கடந்த 2019ஆம் மதுரை நாடாளுமன்றத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர். வரும் நாடாமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, இந்த முறை எப்படியும் பாராளுமன்றத்திற்குள் நுழைந்துவிட வேண்டும் என தற்போதே தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறார். இவர் முன்னாள் மதுரை மேயர் ராஜன் செல்லப்பாவின் மகன் ஆவார். இவரது மாமனாரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. என்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க.வில் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜ் சத்தியன் தனது வலைதள பக்கத்தில்,

‘‘புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழிவந்த கழகத்தின் மூன்றாம் அத்தியாயம், கழகத்தை வென்றெடுத்த வீரவரலாற்று நாயகர், இளைஞர்களின் நம்பிக்கை, கழகத்திற்காக கண் துஞ்சாது காத்து நிற்கும் காவலன்….

எவர்கும் அஞ்சா எங்கள் தலைமை மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் எனக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் பொறுப்பளித்து,கழக பணியாற்ற வாய்ப்பளித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்….

நன்றியுடன், என்றென்றும் பாசமிகு அண்ணன் எடப்பாடியார் வழியில்!’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

இது பற்றி அ.தி.மு.க.வில் உள்ள மூத்த ர.ர.க்களிடம் பேசினோம். ‘‘சார், ராஜன் செல்லப்பாவின் மகனான ராஜ் சத்தியன் பிரதிபலனை எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைக்கக் கூடியவர். மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டிற்காக கடுமையாக உழைத்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா எப்படி கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவி கொடுத்து உச்சத்தில் வைப்பார்களோ… அதே போல்தான் ராஜ் சத்தியனுக்கும் மாநில அளவிலான பொறுப்பை கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் எடப்பாடியார்’’ என்றனர்.

அ.தி.மு.க.வில் துடிப்புடன் செயல்படக்கூடிய ராஜ் சத்தியனின் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal