தி.மு.க. ஆட்சிப்பொறுப்பிற்கு வந்த பிறகு தமிழக அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் இருந்து ‘விடுதலை’ ஆவதை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

தமிழக வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டது மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி விடுவிக்கப்பட்டதற்கு எதிராக, தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளில், லஞ்ச ஒழிப்புத் துறை, அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு தமிழக வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு , அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

இதேபோல 2001- 2006 ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்,

இந்த இரு வழக்குகளும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறையின் நடைமுறை மோசமாக உள்ளது. ஒவ்வொரு வழக்கிலும் இதே நடைமுறைகள் பின்பற்றப்படுவது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்கில் 100க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்து ஏராளமான ஆவணங்களை ஆய்வு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் மேல்விசாரணை கோரி தாக்கல் செய்த மனு அடிப்படையில், விசாரணை நடத்திய அதே புலன் விசாரணை அதிகாரி வழக்கை முடித்து வைக்கும்படி கூறி இருக்கிறார்.

அமைச்சர் ஐ பெரியசாமிக்கு எதிரான வழக்கை பொறுத்தவரை வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனுவும், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவும் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், வழக்கு தொடர அனுமதி வழங்கிய விவகாரத்தின் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்து இருக்கிறது.

‘‘கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளை பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும். இந்த வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதால் என்னை வில்லனாக பார்க்கின்றனர். தனிப்பட்ட முறையில் இந்த வழக்குகளை தான் விசாரணைக்கு எடுக்கவில்லை’’ என்று தெரிவித்தார்.

பின்னர் இரண்டு வழக்குகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை, அமைச்சர் ஐ பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal