கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சமீபநாட்களாக தனபால் எடப்பாடி எதிராக பேசிவரும் நிலையில், அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. இதனால், அவர் அளிக்கும் வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்கள் எடப்பாடி எதிராக வழக்கு திரும்பும் என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டு கொள்ளை முயற்சி நடைபெற்றது. அப்போது, எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். எஸ்டேட்டில் இருந்த சில ஆவணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு கொள்ளை கும்பல் தப்பியது.

இந்த வழக்கில் ஆதாரங்களை அழித்ததாக, உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கோவை சி.பி.சி.ஐ.டி கூடுதல் எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீசார் மறுவிசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் இதுவரை 300-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரித்துள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியானார். வழக்கு தொடர்பான சில விவரங்கள் தெரிந்திருந்தும், அதனை மறைத்ததாக கூறி கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அவர்கள் 2 பேரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்நிலையில், ஜாமீனில் வெளிவந்த கனகராஜின் சகோதரர் தனபால், “எனது தம்பி கனகராஜ் விபத்தில் உயிரிழக்கவில்லை, அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடமும், அதிமுக முன்னாள் அமைச்சர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும்” என்பது உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

இதையடுத்து, அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்தனர். இதற்காக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தனபாலிடம் விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தனபால் தற்போது ஜாமீனில் உள்ளதால் சம்மன் அனுப்பி அவரிடம் விசாரித்துக் கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வரும் 17ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டது. சேலத்தில் உள்ள அவரது வீட்டில் இந்த சம்மன் வழங்கப்பட்டது. தனபாலிடம் விசாரணை நடத்தும்போது, அவர் கூறிய அதிர்ச்சி கருத்துகள் தொடர்பாக பல்வேறு விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே தனபாலின் மனைவி, ‘ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தூண்டுதலின் பேரில்தான் எனது கணவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசி வருகிறார். எனது கணவருக்கு மனநிலை சரியில்லாமல் போய்விட்டது. எனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது’ என நேற்று கண்ணீர்மல்க பேட்டியளித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal