பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சொகுசு வசதிக்காக லஞ்சம் கொடுத்த புகாரில் ஆஜராகாத சசிகலா, இளவரசிக்கு கர்நாடகா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருக்கிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிலையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது சிறையில் சொகுசு வசதிகளைப் பெறுவதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக இவர்கள் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்த வழக்கு கர்நாடகா லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா, இளவரசி தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து இரண்டு பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி, அக்டோபர் 5ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சசிகலா தரப்பு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் மீண்டும் சிறை செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal