ஒரு கட்சித் தலைவரை எப்படியாவது ‘ஐஸ்’ வைத்து ‘பொறுப்பு’ வாங்கிவிடவேண்டும் என துடிப்பதுதான் ‘அரசியல்’! ஜெயலலிதா சிறையில் இருக்கும் போது, ‘மண்சோறு’ சாப்பிட்டு, குடம் குடமாக கண்ணீர் வடித்தனர் (ஜெ. மறைவிற்கு மகளிர் அணியினர் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்ததை பார்க்க முடியவில்லை.) அ.தி.மு.க. மகளிர் அணியினர்!

இந்த நிலையில்தான், தி.மு.க.வில் உதயநிதி அமைச்சரானார், ‘அவரது மகன் இன்பதி அரசியலுக்கு வந்தாலும் வரவேற்பேன்’ (இதுவும் ஒருவித ‘ஐஸ்’தான்)என்றார் சீனியர் நிர்வாகி துரைமுருகன்! இப்போது இன்பநிதி பெயரில் பாசறை உருவாக்கியவர்களை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார் துரைமுருகன்!

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் திமுக மீது வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு ஆனது பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தை அறிஞர் அண்ணா தொடங்கியதற்கு பிறகு கருணாநிதி சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவை வழி நடத்தி ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்தார். இதனைத் தொடர்ந்து கருணாநிதியின் மகனான மு.க. ஸ்டாலின் திமுகவை தொடர்ந்து வழி நடத்தி வருகிறார். இதனை பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திமுக வாரிசு அரசியலை செயல்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியிருந்தனர்.

இதற்கு அடுத்த கட்டமாக திமுக தலைவராகவும், முதலமைச்சராகவும உள்ள ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை அரசியலுக்கு அழைத்து வந்தார். அவரும் தமிழகம் முழுவதும் திமுகவிற்காக பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு திமுகவிற்கு வாக்கு சேகரித்தார். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஏற்கனவே திமுகவை வாரிசு அரசியல் என விமர்சித்து வரும் மத்தியில் அடுத்ததாக உதயநிதி மகன் இன்பநிதிக்கு திமுக நிர்வாகிகள் பாசறை தொடங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் இன்பநிதி பாசறை என்ற பெயரில் போஸ்டரை புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஒட்டியுள்ளனர்.அதில் செப்டம்பர் 24 ஆம் தேதி இன்பநிதி பாசறை சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும்”மண்ணை பிலக்காமல் விதைகள் முலைப்பதில்ல,போராட்ட களமின்றி வெற்றிகள் கிடைப்பதில்லை”னு ஒரு ஒரு கருத்தும் பதிவிட்டிருந்தது. இந்த நிலையில் திமுக தலைமை கழகம் சார்பாக இன்பநிதி பாசறை தொடங்கிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட கலை, இலக்கியப் பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வடவாளம் க.செ.மணிமாறன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மு.க.திருமுருகன் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal