தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை பா.ஜ.க. முழுமையாக வரவேற்கிறது. ஒரே நேரத்தில் அனைத்து தேர்தலும் நடத்த வேண்டும். தேர்தல்கள் மாறி மாறி வருவதால் பல்வேறு பிரச்சினைகள் வருகிறது. இதனால் கொள்கை ரீதியாக முடிவுகள் எடுக்க முடியவில்லை. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வட கிழக்கு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராணுவ பாதுகாப்பு குறைக்கப்படுகிறது.

கோடிக்கணக்கான நபர்கள் தேர்தல் நடத்த பயன்படுத்தப்படுகிறார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தலை அ.தி.மு.க., த.மா.கா. போன்ற கட்சிகள் வரவேற்றுள்ளன. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற உன்னதமான திட்டத்தை தமிழக மக்கள் வரவேற்க வேண்டும். தமிழகத்துக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு தந்ததை 13 பக்க வெள்ளை அறிக்கை தந்துள்ளோம்.

மத்திய அரசு தமிழகத்துக்கு அதிகம் நிதி ஒதுக்கி உள்ளது. ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்கள் இந்தியா கூட்டணியில் முன்னணியில் நிற்கிறார்கள். இந்தியா கூட்டணியை மக்கள் முழுமையாக நிராகரிப்பார்கள். பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா 400 தொகுதிகளில் வெற்றி பெறும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது பா.ஜ.க.வினரை குறிவைத்து கூலிப்படை வைத்து கொல்கிறார்கள். திமுக கூலிப்படை ஏவி விடுகிறது.

மாணவர்களுக்கு காலை உணவு தந்த தனியார் அமைப்பை தி.மு.க. நிறுத்தியது ஏன்? மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. காலை உணவு திட்டத்தை நான் தான் கொண்டு வந்தேன் என தி.மு.க. சொந்தம் கொண்டாடாமல் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். சீமானின் சவாலுக்கு பாரதிய ஜனதா தயார். 10 சதவீதம் என்ன? 30 சதவீதம் வாக்குகளை கூடுதலாக வாங்கி காட்டுவோம்.

சீமான் தனியாக நிற்பது கொள்கை அல்ல. யாரும் சேர்க்கவில்லை என்பது தான் காரணம். எங்களுக்குள் கட்சி அடிப்படையில் முரண் இருந்தாலும், தி.மு.க.வை எதிர்க்க சீமான் வேண்டும். கோவை கார் குண்டு வெடிப்பை சிலிண்டர் வெடிப்பு என்று முதலில் கூறிய தமிழக காவல்துறைக்கும், தி.மு.க. அரசிற்கும் கரும்புள்ளி. கோவை ஆபத்தில் இருந்து முழுமையாக தப்பிக்கவில்லை.

தீவிரவாத செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. அப்படி முடிவு செய்தால் கவர்னர் கையெழுத்திட கூடாது. தி.மு.க.வினர் வாயால் வடை சுடுகிறார்கள். சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தரப்படும் என்ற தி.மு.க.வினர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பாராளுமன்ற தேர்தலில் 39-க்கு 39 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal