முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ பட வெற்றிக்கொண்டாட்டத்தில் திளைத்திருக்கிறார். படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்துக்கு செக் ஒன்றில் குறிப்பிட்ட தொகையை பரிசளித்தார். அத்துடன் BMW X7 கார் ஒன்றையும் பரிசாக கொடுத்துள்ளார். அதேபோல இயக்குநர் நெல்சனுக்கு செக் மற்றும் Porsche கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் நாளை காஞ்சிபுரத்திலிருந்து தமிழகம் முழுவதும் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ள நிலையில் இன்று ரஜினிகாந்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்த்தை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்தது பற்றி அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எடப்பாடி பழனிசாமி மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். ‘மேலிடத்தால்’ தொடர்ச்சியாக ஓரங்கட்டப்பட்டு வந்தார் ஒ.பன்னீர் செல்வம்.

இந்த நிலையில்தான் சமீபத்தில் உ.பி. சென்று யோகியை சந்தித்தார் ரஜினி. மேலும் பி.ஜே.பி.யில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்தார் ரஜினிகாந்த். வரும் நாடாளுடன்றத் தேர்தலில் ரஜினியின் கண் அசைவிற்காக காத்திருக்கிறது பி.ஜே.பி. எனவே, ரஜினிகாந்த் மூலம் மேலிடத்தில் காய் நகர்த்தலாம் என தூது விட, ஜெயிலர் வெற்றிக்கு வாழ்த்துச் சொல்வது போல் சென்றாராம் ஓ.பி.எஸ்.!

ஆனாலும், நடிகர் ரஜனிகாந்த்தைப் பொறுத்தளவில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவாக கண் அசைக்கமாட்டார். காரணம், தற்போது அரசியலில் இருந்து விலகியிருக்கிறார். மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடன் இணக்கமாக செல்வதைத்தான் ரஜினி விரும்புவார். எனவே, ஓ.பி.எஸ்.ஸின் தூது பலிக்க வாய்ப்பில்லை’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal