‘கொடநாடு என்றாலே எடப்பாடிக்கு கொலநடுக்கம் வருகிறது. விரைவில் கொலை, கொள்ளை தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என முரசொலியில் செய்தி வெளியாகியிருக்கிறது.

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக திமுகவின் நாளேடான முரசொலியில் வெளிவந்துள்ள தலையங்கத்தில் கொடநாடு’ என்று சொன்னாலே ‘கொல நடுக்கம்’ ஏற்படுகிறது பழனிசாமிக்கு. அதிகமாகப் பதறுகிறார் பழனிசாமி. எதற்காக அவர் பதற வேண்டும்?’எனக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்லத் தயார்’ என்று என்றாவது சி.பி.சி.ஐ.டி. வாசலுக்கு அவர் வந்திருந்தால் அவரை நம்பலாம். ஆனால், அவரது பதற்றமே அவர் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜின் அண்ணன் தனபால் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியைப் பார்த்ததும் பழனிசாமியின் பிபி எகிறுகிறது.

கொடநாடு கொலை. கொள்ளை, மர்ம மரணங்கள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும். கொடநாட்டில் இருந்து 5 பைகள் நிறைய ஆவணங்களை எனது தம்பி கனகராஜ் கொண்டு வந்தார். பெருந்துறையில் வைத்து அதனை என்னிடம் காண் பித்தார். அதில், 3 பை சங்ககிரிக்கும். 2 பை சேலத்திற்கும் எனது தம்பி எடுத்துச் சென்று கொடுத்தார். அப்போது சயானும் உடனிருந்தார். எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் இதனை எனது தம்பி செய்தார். ஆனால் எனது தம்பியை பலிகடாவாக்கி விட்டனர். தற்போது எனது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்கிறார் கனகராஜின் அண்ணன் தனபால். இவர் சொல்வது உண்மையோ பொய்யோ நமக்குத் தெரியாது. பழனிசாமிக்குத்தான் தெரியும். அவர்தான் முழு உண்மையைச் சொல்ல வேண்டும்.

ஆனால் பழனிசாமி அந்த உண்மையைச் சொல்லவில்லை. ‘கனக ராஜுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கொடநாடு வீட்டுக்குள் அவரை நான் அனுப்பவில்லை. கனகராஜ் எந்தப் பையையும் கொண்டு வந்து என்னிடம் தரவில்லை. இதை எந்த இடத்திலும் சொல்ல நான் தயாராக இருக்கிறேன்’ என்றல்லவா பழனிசாமி சொல்லி இருக்க வேண்டும். அதைச் சொல்லவில்லை பழனிசாமி. ‘கனகராஜ். ஜெயலலிதாவின் கார் டிரைவர் அல்ல. சசிகலாவின் டிரைவர்தான்’ என்று விளக்கம் அளித்துள்ளார். கனகராஜ் யார் காரை ஓட்டினார் என்பதல்ல பிரச்சினை.

கனகராஜை ஏவியது யார் என்பதுதான் கேள்வி. கொடநாடு பங்களாவில் கொலை. கொள்ளை நடந்தது 2017 ஏப்ரல் 23 ஆம் தேதி. அப்போது முதலமைச்சராக இருந்தவர் பழனிசாமி. அன்றைய தினமே ஓம்பகதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டார். அடுத்த ஐந்தாவது நாள் அதாவது ஏப்ரல் 28 ஆம் தேதி ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி சந்தனகிரி புறவழிச்சாலை தென்னங்குடி பாளையம் என்ற இடத்தில் மர்மமான முறையில் கனகராஜ் இறந்து கிடந்தார். இருசக்கர வாகனத்தில் சென்ற கனகராஜ் மீது கார் மோதியதாக அ.தி.மு.க. ஆட்சியில் வழக்கு பதியப்பட்டது. ‘இது விபத்து அல்ல. என் சகோதரர் மரணத்தில் மர்மம் உள்ளது’ என்று கனகராஜின் சகோதரர் தனபால் அன்று முதல் சொல்லி வருகிறார்.

இந்த வகையில் ஒரு கொள்ளை ஒரு கொலை மூன்று மர்ம மரணங்கள் – ஒரு தற்கொலை ஆகியவை நடந்த மர்மமான வழக்கு இது. பழனிசாமி ஆட்சி செய்தபோது தான் இது நடந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் சிலரை கைது செய்து கணக்குக் காட்டி முடிக்கப் பார்த்தார்கள். தி.மு.க. ஆட்சி மாறியதும். வழக்கின் விசாரணை உண்மையாக நடக்கத் தொடங்கியது. குற்றம் சாட்டப்பட்டு கைதானவர்களே, ‘நாங்கள் இன்னும் சில உண்மைகளைச் சொல்ல வேண்டும்’ என்று முன் வந்ததால் அந்த வழக்கு மீண்டும் நீதிமன்ற அனுமதியுடன் விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணையைத் தொடங்கியதும், பதற்றம் ஆனார் பழனிசாமி. 2021 ஆகஸ்ட் 18 ஆம் நாள் சட்டமன்றத்தில் கொந்தளித்தார். வெளிநடப்பு செய்தார். உடனடியாக ஆளுநரிடம் போய் மனு கொடுத்தார். ‘என்னைக் கைது செய்ய சதி’ என்று அலறினார்.

“கொடநாடு வழக்கை மீண்டும் விசாரிக் கக் கூடாது. சயன் வழக்கு முடியும் தருவாயில் உள்ளது. இதை மீண்டும் விசாரித்து வருகிறார்கள். இவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். சயன் வாக்குமூலத்தில் என்னையும் இணைத்துள்ளார்கள். மீண்டும் வழக்கை விசாரிக்கிறார்கள். பழிவாங்க இதை ஜோடிக்கிறார்கள்” என்று ஏதேதோ சொன்னார் பழனிசாமி. ஒரு வழக்கை மீண்டும் விசாரிக்கக் கூடாது என்று சொல்ல இவர் யார்? எந்த வழக்கையும் மேற்கொண்டு புலன் விசாரணையை காவல் துறை நடத்தலாம்.

மேல் புலன் விசாரணை (Further Investigation) என்பது குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டத்தின் 173(8) பிரிவின் படி நடத்தப்படுவது. அதன்படி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பின்னர் கூடுதல் தகவல் கிடைத்தால் அதை முறைப்படி விசாரணை செய்ய காவல் துறைக்கு உரிமையும் கடமையும் உண்டு. அதன்படி தான் கொடநாடு வழக்கிலும் மேற்கொண்டு புலன் விசாரணை நடத்தப்படுகிறது. சட்டப்படி தான் நடக்கிறது விசாரணை. அனைத்தும் சட்டப்படி விரைவில் நடக்கும் என முரசொலி தனது தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal