அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்து தனி நீதிபதி குமரேஷ் பாபு கடந்த மார்ச் 28ம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து, ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி.பிரபாகர் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணை மொத்தம் 7 நாட்கள் நடைபெற்றது. இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஓபிஎஸ் உள்ளிட்டோர் 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதில், உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளதால், தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது. ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கிய, சிறப்பு தீர்மானத்துக்கும் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டதை அடுத்து அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பையொட்டி, ஓ.பி.எஸ்.ஸின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம்.

‘‘சார், ஏற்கனவே டி.டி.வி.தினகரன் அ.ம.மு.க. என்ற தனிக்கட்சியை தொடங்கி விட்டார். அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி தனது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டதால், ஒன்று அ.ம.மு.க.வில் சேரவேண்டும். இல்லாவிட்டால் தனிக்கட்சி தொடங்க வேண்டும். ‘மேலிடம்’ என்ன சொல்கிறதோ அதுபடி ஓ.பி.எஸ். அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்குவார்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal