நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில், திருந்தி வாழும் ரவுடியான நரசிம்ஹாவுடன் (சிவராஜ்குமார்) நெருங்கிய நட்பில் இருப்பார். அதே போல், நிஜத்திலும் ஒரு ‘டானுடன்’ ரஜினி நெருக்கமாக இருப்பதுதான் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

ரஜினிகாந்த் ஜெயிலர் பட ரிலீசுக்கு முன்னரே ஆன்மீக பயணமாக இமயமலைக்கு சென்றுவிட்டார். அங்கு ஒரு வார காலம் தங்கி இருந்து, அங்குள்ள ஆன்மீக தலங்களில் தரிசனம் செய்த ரஜினி, திடீரென ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு சென்றார். அங்கும் சில கோவில்களுக்கு சென்ற அவர், அம்மாநில ஆளுநரான சி.பி.ராதாகிருஷ்ணனையும் சந்தித்தார். இதன்பின்னர் உத்தர பிரதேசத்துக்கு சென்ற ரஜினி அங்கு அம்மாநில முதல்வருடன் ஜெயிலர் படம் பார்க்க திட்டமிட்டு இருந்தார்.

கடைசி நேரத்தில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜெயிலர் படம் பார்க்க வராததால், அம்மாநில துணை முதல்வருடன் அப்படத்தை கண்டுகளித்தார் ரஜினி. இதுவரை சுமூகமாக சென்ற ரஜினியின் உபி பயணம், இதன்பின்னர் தான் சர்ச்சையில் சிக்கியது. அதன்படி ஜெயிலர் படம் பார்த்து முடித்த கையோடு முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்திக்க சென்றார் ரஜினி. அப்போது அவரது காலில் விழுந்து ரஜினி ஆசிர்வாதம் வாங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ரஜினியின் இந்த செயலால் அவரது ரசிகர்களே கோபமடைந்தனர். பின்னர் யோகி மற்றும் குருமார்களின் காலில் விழுவது என்னுடைய வழக்கம், அதனால் தான் அப்படி செய்தேன் என விளக்கம் அளித்தார் ரஜினி. உபி பயணத்தின் போது அகிலேஷ் யாதவ் உள்பட பிற அரசியல் கட்சியை சேர்ந்தவர்களையும் சந்தித்திருந்தார் ரஜினி, அதில் ஒருவர் தான் ரகுராஜ் பிரதாப் சிங் என்கிற ராஜா பையா.

ஜன்சத்தா தளம் கட்சியை சேர்ந்த இவர், அம்மாநிலத்தில் உள்ள குண்டா என்கிற தொகுதியில் எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார். 1993ம் ஆண்டு முதல் அந்த தொகுதியில் இவர் தான் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். இவர் இப்படி தொடர்ச்சியாக வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆவதற்கு அவர்மீதுள்ள பயம் தான் காரணம் என கூறப்படுகிறது. அந்த அளவுக்கு டெரரான ஆளாகவும் இருந்து வருகிறார் ராஜா பையா. இவர்மீது பல்வேறு கொலை வழக்குகளும் உள்ளனவாம்.

உபியில் மாயாவதி ஆட்சியில் இருந்தபோது பாஜக எம்.எல்.ஏ.வையே கடத்தியதால் கைதும் செய்யப்பட்டார் ராஜா. இதேபோல் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையின் கீழ் ஒருமுறை ராஜாவை கைது செய்தபோது, தன்னுடைய பவரை பயன்படுத்தி முலாயம் சிங் ஆட்சிக்கு வந்த அடுத்த 25 நிமிடத்தில் இவர்மீதான அனைத்து குற்றங்களும் நீக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இதுதவிர இவரது வீட்டில் ரெய்டு செய்த ஐபிஎஸ் அதிகாரி ஆர்.எஸ்.பாண்டே என்பவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இதிலும் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. பாஜக-வை ஆதரித்து வரும் இவர் தீவிர ஜாதி வெறியர் என்றும் கூறப்படுகிறது. இப்படி உபி-யில் பல கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய மிகப்பெரிய டான் ஆக இருந்து வரும் ராஜாவை ரஜினிகாந்த் சந்தித்து, அவரிடம் பவ்வியமாக கைகூப்பு நின்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் என்ன தலைவா ரவுடியுடனே சகவாசமா என கிண்டலடித்து வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal