ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் ‘காக்கா & கழுகு’ கதை விஜய்க்குதான் என ரஜினி ரசிர்கள் கூறிவந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை சீண்டும் விதமாக விஜய் ரசிகர்கள் மதுரையில் ஒட்டிய போஸ்டரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோலிவுட்டில் தற்போது ஹாட் டாப்பிக் ஆக பேசப்பட்டு வருவது சூப்பர்ஸ்டார் டைட்டில் சர்ச்சை தான். ரஜினிகாந்த் தான் பல ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு சொந்தம் கொண்டாடி வருகிறார். அந்த பட்டத்துக்கு தற்போது விஜய்யும் போட்டியில் குதித்துள்ளது தான் இந்த பரபரப்புக்கு காரணம். இதுகுறித்து விஜய் நேரடியாக சொல்லாவிட்டாலும், வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தன்னை சூப்பர்ஸ்டார் என புகழ்ந்தபோது அமைது காத்து வந்ததே அவருக்குள் இருக்கும் ஆசையை வெளிச்சம் போட்டு காட்டியது.

இந்த சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஜினியின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ஹுகூம் பாடல் அமைந்திருந்தது. அதன் வரிகளில், பேர தூக்க நாலு பேரு, பட்டத்தை பறிக்க நூறு பேரு என இடம்பெற்றிருந்த வரிகள் சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படும் நடிகர்களுக்கு ரஜினி கொடுத்த எச்சரிக்கை போலவே பார்க்கப்பட்டது. இதுபோதாதென்று, ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் அவர் பேசியது மேலும் சர்ச்சையை கிளப்பியது.

சூப்பர்ஸ்டார் பட்டம் எப்பவுமே தலைவலிதான் என கூறி, அவர் காக்கா, பருந்து கதை ஒன்றை சொல்லி இருந்தார். இதில் அவரை பருந்து போலவும், விஜய்யை காக்கா என சித்தரித்து தான் ரஜினி இந்த கதையை சொன்னதாக சர்ச்சை எழுந்ததோடு, இந்த விவகாரம் பூதாகரமாகவும் வெடித்தது. இதுதொடர்பாக ரஜினி, விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக்கொண்ட சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. ரஜினியின் பேச்சுக்கு விஜய் இதுவரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

விஜய் மௌனமாக இருந்தாலும், அவரது ரசிகர்கள் ரஜினியை சீண்ட ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் மதுரையை சேர்ந்த ‘மதுரை மண்ணின் மைந்தன் விஜய் அண்ணா வெறியர்கள்’ ஒட்டியுள்ள போஸ்டர் தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த போஸ்டரில், ‘என்னுடைய உச்சம்… உனக்கு ஏன் அச்சம்’ என குறிப்பிட்டு விஜய் மற்றும் ரஜினியின் புகைப்படங்களை போட்டு ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் டுவிட்டரில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal