‘வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தோற்பது உறுதி! கனிமொழி தி.மு.க.வின் அடுத்த தலைவர் ஆவது உறுதி’ என அண்ணாமலை ஆருடம் கூறியிருப்பதுதான், தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் சிலரையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

‘என் மண் என் மக்கள்’ என்ற தலைப்பில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அண்ணாமலை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைக் கடந்து தற்போது மதுரை மாவடட்த்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று மதுரையில் நடைபயணத்தில் பங்கேற்ற அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அண்ணாமலை, ‘‘7.53 லட்சம் கோடி கடன் வாங்கி தமிழ்நாட்டை கடன்கார மாநிலமாக, குடிகார மாநிலமாக மாற்றிவிட்டு, இன்னும் இந்தி தமிழ் பிரச்சனையை வைத்து வண்டியை உருட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் மக்களிடம் ஆக்கப்பூர்வமாக பேசுவதற்கு முக ஸ்டாலினுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் எந்தக் கருத்தும் இல்லை. அதனால் எதையுமே புரியாமல் அரசியலுக்காகப் பேசுகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி எங்காவது ஒரு இடத்தில் இந்தி தொன்மையான மொழி எனப் பேசியதை மு.க.ஸ்டாலினை காட்டச் சொல்லுங்கள். ஆரம்பம் முதலே தமிழ் மொழி பற்றி, திருக்குறள் பற்றிப் பேசி வருகிறார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியாருக்கு இருக்கை அமைக்கிறார். ஐந்தாவது தமிழ்ச் சங்கம் எடுத்த பெருமைக்குரியவர் என யாரையாவது சொல்ல வேண்டுமென்றால் அது நமது பிரதமர் மோடி தான்’’எனத் தெரிவித்தார்.

பாஜகவுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வாழ்வா சாவா தேர்தல், தேர்தலுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறி இருக்கிறாரே என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, ‘‘வாழ்வா சாவா தேர்தல் எங்களுக்கு அல்ல. முதலமைச்சர் ஸ்டாலின் தோற்றால் அக்கா கனிமொழி, திமுகவின் தலைவர் ஆகிவிடுவார்.

போன முறை திமுக ஜெயித்தது வெறும் ஒன்றரை சதவீதம் வாக்குகளில் தான். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குத்தான் இது வாழ்வா சாவா தேர்தல். இதில் திமுக தோற்றால் நிச்சயம் தலைமையில் மாற்றம் ஏற்படும். தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வி அடையப்போவது உறுதியாகிவிட்டது. கனிமொழி அடுத்த தி.மு.க.வின் தலைவராவது உறுதி’’ என்றார்.

அண்ணாமலையின் ஆருடம் பலித்துவிடுமோ என தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் இப்போதே மாற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal