‘தமிழகத்தில் 24 மணி நேரம் மது கிடைக்கிறது. இதுதான் தி.மு.க.வின் விடியல் ஆட்சியா?’ என விளாசியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுகவின் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கரூரில் அது தொடர்பான விளம்பர போஸ்டர் 100 ஆட்டோக்களில் ஒட்டும் பணியினை முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சின்னசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், ‘‘மதுரையில் நடைபெறும் இந்த மாநாடு தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும். இந்த மாநாட்டில் கரூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.

அரசுப் பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு என்று வரைமுறை இருக்கிறது. ஆனால், அவற்றை எல்லாம் மீறி பேருந்து முழுவதும் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள். சின்ன இடத்தில் அரசு போக்குவரத்து கழகம் என வெளியில் தெரிகிறது. காசு கொடுத்தால் எங்கு வேண்டும் என்றாலும் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வார்கள். பீர் கம்பெனி விளம்பர டி சர்ட் போட்டு கிரிக்கெட் பார்க்க வரும் அமைச்சர் உதயநிதி, அரசுப் பேருந்தில் பீர் விளம்பரம் போடாமல் இருப்பார்களா? அந்த நிறுவனமே அவர்களுடையது தான். தமிழகத்தில் 24 மணி நேரமும் மதுபானம் கிடைக்கிறது. வாழ்க திராவிட மாடல் ஆட்சி’’என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal