நடிகர் விஜய் தனது ‘லியோ’ பட பணிகளை முடித்து விட்டு தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். இந்த நிலையில்தான் திடீர் வெளியாடு பயணம் குறித்து சில தகவல்கள் கசிந்திருக்கிறது.

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் வருகிற அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது. லியோ படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லியோ பட பணிகளை முடித்த பின்னர் நடிகர் விஜய், தன்னுடைய அரசியல் பணிகளில் பிசியாக இருந்தார். அண்மையில் மாவட்ட வாரியாக மக்கள் இயக்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனையும் நடத்தினார்.

அதோடு காமராஜர் பிறந்தநாளன்று இரவு நேர பயிலகம் தொடங்கி வைத்தார் விஜய். இப்படி தன்னுடைய அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளை படிப்படியாக மேற்கொண்டு வந்த அவர், வருகிற ஆகஸ்ட் மாதம் பெரியாரின் பிறந்தநாளன்று தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. இப்படி அரசியல் பணிகளில் பிசியாக இருந்த விஜய், அதனை பாதியில் நிறுத்திவிட்டு சில தினங்களுக்கு முன் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார்.

விஜய்யின் திடீர் வெளிநாடு பயணம் எதற்காக என்பது புரியாத புதிராக இருந்த நிலையில், அதன் பின்னணியில் இருக்கும் ரகசியத்தை சர்ச்சைக்குரிய சினிமா பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் போட்டுடைத்துள்ளார். அதன்படி நடிகர் விஜய்யை ஜூலை 28-ந் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அழைத்திருந்தார்களாம்.

அந்த விழாவுக்கு செல்வதை தவிர்ப்பதற்காகவே விஜய் தற்போது திடீர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளதாக புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார் பயில்வான். ஏற்கனவே சூப்பர்ஸ்டார் பட்டத்துக்காக விஜய்க்கும், ரஜினிக்கும் இடையே பிரச்சனை உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் உலா வந்த நிலையில், தற்போது பயில்வான் கூறி உள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal