அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் காவல் நீட்டிக்கப்படும் என ‘தமிழக அரசியல்’ டாட் காமில் காலை செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில்தான், அமைச்சர் செந்தில் பலாஜியின் நீதிமன்ற காவல் 3ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் (ஆகஸ்ட் 8 வரை) நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அமலாக்கத்துறை கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அவரை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதனிடையே, செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டது. அதன்படி, காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்படி பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால், சென்னை புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார்.

அதேசமயம், அமைச்சர் செந்தில் பாலஜியின் நீதிமன்ற காவல் ஜூலை 12ஆம் தேதியும், பின்னர் ஜூலை 26ஆம் தேதி வரையும் நீடிக்கப்பட்டது. இந்த நிலையில், அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததால், அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காணொலி காட்சி வாயிலாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வருகிற ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மற்றும் சட்டவிரோத கைது ஆகிய இரு மனுக்களின் மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதனால், செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை 3ஆவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த 3ஆவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன், செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது. அவரை நீதிமன்ற காவலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்டப்படியானது என உத்தரவிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கில் விசாரணையும் இன்று நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும், அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தாவும் ஆஜராகி வாதிட்டு வருகின்றனர்.

முன்னதாக, செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை எப்போதில் இருந்து காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்பது குறித்து முடிவெடுக்கும் வழக்கானது, அந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வான நீதிபதி நிஷாபானு, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தான் பிறப்பித்த தீர்ப்பில் உறுதியாக இருப்பதாக நீதிபதி நிஷாபானு தெரிவித்தார். மேலும், இந்த வழக்கின் அனைத்து அம்சங்கள் குறித்தும் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கும். எனவே, இந்த வழக்கை இங்கு நிலுவையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal