குடியை மறப்பதற்கு பலர் மறுவாழ்வு மையத்திற்கு செல்கின்றனர். வசதி படைத்தவர்கள் வசதிக்கேற்றவாறு மதுவை மறக்க மருத்துவமனைகளுக்கு செல்வார்கள். ஆனால், கிராமங்களில் மதுவை மறக்க கருப்புசாமி கோவிலுக்கு சென்று கயிறு கட்டுவார்கள். அந்த வகையில் ஒரு சக்தி வாய்ந்த கருப்பு சாமியைப் பற்றி பார்ப்போம்..!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள விராலிப்பட்டி கிராமத்தில் அருள்மிகு கருப்புசாமி கோயில் என்று அழைக்கப்படும் பழமையான கோட்டை சுவாமி கோயில் உள்ளது. 200 ஆண்டுகள் ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் ஒவ்வொரு வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளிலும் திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த கோயிலுக்கென ஒரு தனித்துவமான பாரம்பரியம் உள்ளது. மது பழக்கத்திற்கு அடிமையான நபர்கள் இந்த கோயிலுக்கு வந்து, குடிப்பழக்கத்தை கைவிடுவதாக சத்தியம் செய்கின்றனர். மதுவைத் தவிர்ப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டைக் குறிக்கும் வகையில், கோயில் பூசாரியிடம் கயிறு கட்டி சென்றால் மது அருந்தும் பழக்கத்தை விட்டுவிடுவார்களாம்.

இதனால் குடிப்பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் ஆண்கள், கருப்பசாமி கோவிலுக்கு அழைத்து வந்து இந்த மதுவிலக்கு உறுதிமொழியை எடுக்கவைத்து கயிறு கட்டி விடுகின்றனர். இந்த கோயிலில் மது அருந்தமாட்டேன் என்று கயிறு கட்டிய பிறகு, ஒருவர் மது அருந்தினால், அவரின் குடும்பத்தில் கருப்புசாமி பல இன்னல்களை சந்திக்க வைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த கருப்பு சாமி கோயிலில் ஆடி மாத அமாவாசைக்கு பிறகு வரும் வெள்ளிக்கிழமையில் கொண்டாடப்படும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அருள்மிகு கருப்புசாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் சார்பில் ஆட்டுக்குட்டிகள் பலியிடப்பட்டு வருகின்றன. இந்த திருவிழாவில் நடைபெறும் சடங்குகள் மற்றும் விருந்தில் பங்கேற்கும் ஆண்கள் மட்டுமே பங்கேற்பார்கள்.

படையல் என்றால் பொதுவாக சோறு, குழம்பு அடங்கிய உணவாக இருக்கும். ஆனால் இந்த கோயிலில் ஆட்டுக்கறியை மட்டுமே படையலாக போட்டு உண்பார்கள். ஆடி மாத திருவிழாவின் போது, திருவிழாவில் பங்கேற்கும் 5000 க்கும் மேற்பட்ட ஆண்கள் அனைவரும் மது அருந்தாமல் இந்த திருவிழா சடங்குகளை செய்கின்றனர். ஒருவேளை இந்த திருவிழாவில் பங்கேற்கும் ஆண்கள் யாராவது மது அருந்தி இருந்தால், அவர்கள் கோயிலுக்கு செல்ல மாட்டார்கள் என்றும் நம்பப்படுகிறது.

இந்த கருப்புசாமி கோயில் வளாகத்தில் நடக்கும் திருவிழாவில் யாரேனும் மது அருந்திவிட்டு கலந்து கொள்ளத் துணிந்தால், அவர்கள் உயிருடன் வீடு திரும்ப மாட்டார்கள் என்றும், அல்லது கடுமையான காயங்களுக்கு ஆளாகிறார்கள், கைகள் அல்லது கால்கள் போன்ற உடலின் பாகங்களை இழக்க நேரிடும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

கோயில் அர்ச்சகர் கோபால் இதுகுறித்து பேசிய போது, கருப்பசாமி, குழந்தை வரும் கேட்டு இங்கு வரும் பக்தர்களுக்கு குழந்தை பாக்கியத்தையும், வேலை தேடுபவர்களுக்கு அரசு வேலைகளையும் வழங்குவதாக நம்பப்படுகிறது. கருப்புசாமியின் கருணையின் அடையாளமாக இருக்கும் இந்த கோட்டை, இப்பகுதி மக்களைப் பாதுகாப்பதாகவும், அவரிடம் அடைக்கலம் தேடும் பக்தர்களுக்கு நல்வாழ்வை வழங்குவார்” என்று தெரிவித்தார்.

இக்கோயிலில் ஆடி மாத திருவிழா அமாவாசையை அடுத்து வரும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது. இந்த பண்டிகையின் போது, பக்தர்கள் நேர்த்திக்கடனுக்கு விடப்பட்ட ஆட்டுக்குட்டிகள் பலி கொடுக்கப்பட்டு, அங்கேயே சமைக்கப்படும். பின்னர் அந்த உணவு திருவிழாவிற்கு வருபவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் பெண்கள் கலந்து கொள்ளக் கூடாது என்பது நெடுங்காலமாக இருந்து வரும் நம்பிக்கை. எனவே இன்று வரை எந்தப் பெண்களும் இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை.

ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த திருவிழாவில் சுமார் 5000 பேர் பங்கேற்பார்கள். இக்கோயிலில் எத்தனை ஆடுகள் பலியிடப்பட்டாலும், அவை அனைத்தும் கோயிலின் எல்லைக்குள் சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு கொடுத்து விட வேண்டும். கருப்பசாமி திருக்கோயிலின் எல்லையை விட்டு ஒரு துண்டு கறி கூட வெளியே போக கூடாது என்பதும் நீண்டகாலமாக கடைபிடிக்கப்படும் மரபாக உள்ளது.

எல்லாவற்றிற்கும் மனதுதான் காரணம்… ஆனால், அந்த மனதை கட்டுப்படுத்த முடியாமல் தான் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal