அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக கோரி அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு 4 முறை சம்மன் அனுப்பிய நிலையில், ஆஜராகத காரணத்தால் சட்ட ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதில் சட்டவிரோத பணம் பறிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் கடந்த மாதம் விசாரணை நடத்தி கைது செய்தது. அப்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது இருதய பகுதியில அடைப்பு இருப்பது தெரிய வந்ததையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர் புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார்.

செந்தில் பாலாஜியின் உடல்நிலை பாதிப்பு காரணமாக தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து அமலாக்கத்துறையால் விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் சட்டவிரோத பணம் பறிமாற்றம் தொடர்பாக 40 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் முக்கிய நபராவார், இவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது.

ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் 4 முறை கால அவகாசம் கேட்டிருந்தார். தற்போது தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருப்பதாகவும் எனவே மீண்டும் ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என கேட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையில் 40 பேர் ஆஜராக சம்மன் அளித்த நிலையில் 20 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

மற்ற 20 பேர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளனர். இந்தநிலையில் விசாரணைக்கு உரிய முறையில் ஒத்துழைக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக அசோக்குமார் மீது புகார் தெரிவித்துள்ள அமலாக்கத்துறை அடுத்த கட்டமாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஒரு மாதமாக அசோக்குமார் தலைமறைவாக இருப்பதால், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கவும் அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal