நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க பாஜக கூட்டணி கட்சிகளை டெல்லிக்கு அழைத்த பாஜக, தேமுதிகவை அழைக்காதது அந்த கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து திமுக கூட்டணிக்கு செல்லும் வகையில் தூது விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகராக தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆகி ரசிகர்களின் மனதை ஆழமாக பிடித்துக்கொண்டவர் விஜயகாந்த், திமுக, அதிமுக ஆட்சிக்கு மாற்றாக தேமுதிக என்ற கட்சியை தொடங்கி அரசியல் கட்சிகளை ஆட்டம் காண செய்தார். சராசரியாக 8 சதவிகதம் முதல் 10 சதவிகித வாக்குகளை பெற்று வந்த விஜயகாந்த். மக்களோடும் கடவுளோடும் தான் கூட்டணி என கூறி அரசியல் கட்சிகளை அலறவிட்டார். ஒரு கட்டத்தில் தனித்து போட்டியிட்டு ஒரு இடத்திற்கு மேல் பெற முடியாத நிலையில் 2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தார். அந்த தேர்தலில் திமுகவை வீழ்த்தி சட்டமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாக தேமுதிக அமர்ந்தது.

நாட்கள் செல்ல, செல்ல ஜெயலலிதா- விஜயகாந்த் இடையே ஏற்பட்டமோதல் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து தேமுதிக எம்எல்ஏக்களை தனது பக்கம் இழுக்க தொடங்கினார் ஜெயலலிதா, இதன்காரணமாக அதிருப்தி அடைந்த தேமுதிக கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதனை தொடர்ந்து 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியோடு தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் 234 தொகுதிகளில் 90% இடங்களில் டெபாசிட் இழந்தது. இதன் காரணாமக தேமுதிகவின் செல்வாக்கு மக்களிடம் குறைய தொடங்கியது.

இந்த காலகட்டத்தில் விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை நேரில் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் கட்சி முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சிக்கு செல்லும் நிலையும் ஏற்பட்டது.

இந்தநிலையில் தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் அதளபாதளத்திற்கு சென்றது. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறமுடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மீண்டும் சட்டமன்ற தேர்தலின் போது தேமுதிகவிற்கு ஒற்றை இலக்கத்தில் அதிமுக சீட் ஒதுக்கியதால் தனித்து போட்டியிட்டது. அப்போது போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்தது.

இந்திநலையில் தான் தேமுதிக நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே பாஜக கூட்டணி கட்சி கூட்டம் டெல்லியில் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக, பாமக, தமாக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. மேலும் ஜான்பாண்டியன், பாரிவேந்தர், தேவநாதன் உள்ளிட்ட கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த கட்சிகளை விட பெரிய கட்சியான தேமுதிகவிற்கு அழைப்பு விடுக்காதது அந்த கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இதன் காரணமாக இந்த முறை திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தேமுதிக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் திமுக தரப்பில் இருந்து எந்தவித கிரீன் சிக்னலும் கிடைக்காத காரணத்தால் ஓபிஎஸ், டிடிவி, அணியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க திட்டம் தீட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal