நாட்டின் அனைத்து ஊராட்சிகளிலும் மின்னணு முறையில் பணம் செலுத்தும் முறையை ஆகஸ்டு 15-ந் தேதி முதல் கட்டாயமாக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி அறிவுறுத்தி உள்ளது.

முன்பெல்லாம் உங்கள் நகரங்களிலோ, மாநகரங்களிலோ, பேரூராட்சியிலோ வீட்டு வரி செலுத்தவோ, குடிநீர் வரி கட்டவோ போனால் ரொக்கமாகவே செலுத்தி வந்தீர்கள். ஆனால் இப்போது மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பல்வேறு வகையான வரிகள் மற்றும் கட்டணங்களை மின்னணு முறையில் செலுத்துவது அதிகரித்துள்ளது. மின் கட்டணம் கூட இப்போது மின்னணு முறையில் செலுத்துவது அதிகரித்துள்ளது.

அதேநேரம் ஊராட்சிகளில் குடிநீர் வரி, வீட்டு வரி, நில வரி உள்பட பல்வேறு வரி மற்றும் கட்டணங்களை மக்கள் பெரும்பாலும் ரொக்கமாகவே செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில், அனைத்து ஊராட்சிகளிலும் மின்னணு முறையில் பணம் செலுத்துவது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பில் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் ஆகஸ்டு 15-ந் தேதி முதல், நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளும் மின்னணு முறையில் பணம் செலுத்தும் முறையை பயன்படுத்துவது கட்டாயம். எனவே அனைத்து ஊராட்சிகளும் யு.பி.ஐ. வசதி கொண்ட ஊராட்சிகளாக அறிவிக்கப்பட வேண்டும். முதலமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் போன்ற முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் யு.பி.ஐ. வசதியை தொடங்கி வைக்க வேண்டும்.

யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தும் வசதியை அளிக்கும் கூகுள்பே, போன்பே, பேடிஎம், பீம், மொபிக்விக், வாட்ஸ்அப் பே, அமேசான் பே, பாரத் பே போன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை இம்மாதம் 30-ந் தேதி (இன்று) அனைத்து ஊராட்சிகளும் அழைத்துப்பேச வேண்டும். அவற்றில் தங்களுக்கு பொருத்தமான நிறுவனத்ைத ஜூலை 15-ந் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும். ஊராட்சி முழுவதிலும் இயங்கும் ஒரே நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

யு.பி.ஐ. வசதியை பயன்படுத்த அதிகாரிகளுக்கு மாவட்ட, வட்ட அளவில் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட வேண்டும். பணம் செலுத்துவதை உரியமுறையில் கண்காணித்து வர வேண்டும்” இவ்வாறு மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதம் குறித்து மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை மந்திரி கபில் மொரேஷ்வர் கூறுகையில், மின்னணு முறையில் பணம் செலுத்துவது ஊழலை கட்டுப்படுத்த உதவும் என்றார். இதனிடையே பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர் சுனில்குமார் கூறும் போது, 98 சதவீத ஊராட்சிகள் ஏற்கனவே யு.பி.ஐ. வசதியை பயன்படுத்த தொடங்கி விட்டன. ரொக்கம் மற்றும் காசோலையை பயன்படுத்துவது கிட்டத்தட்ட நின்று விட்டது என்று தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal