நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவன் அடித்துக் கொன்ற சம்பவம்தான் தூத்துக்குடியில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள மேலசுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 50). லாரி டிரைவர். இவரது மனைவி மாரியம்மாள் (45). இவர் தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்று மாலையில் வீடு திரும்புவது வழக்கம். மாரியப்பனுக்கு மதுக்குடிக்கும் பழக்கம் உண்டு என கூறப்படுகிறது.

மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த அவர், அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று வழக்கம் போல மாரியம்மாள் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். மாலையில் ஊருக்கு வெளிப்புறம் உள்ள காட்டுப்பகுதியில் மாரியம்மாள் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

அப்போது அங்கு சென்ற மாரியப்பன், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரியப்பன், அருகில் கிடந்த கம்பால் சரமாரியாக மாரியம்மாளை தாக்கினார். இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். அவ்வழியாக சென்றவர்கள், படுகாயமடைந்து மயங்கி கிடந்த மாரியம்மாளை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இது தொடர்பாக ஓட்டப்பிடாரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மாரியம்மாளை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே மாரியப்பன் இன்று காலை தூத்துக்குடி சிப்காட் போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் ஒட்டப்பிடாரம் போலீசாரிடம் ஒப்படைந்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal