‘மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை வைத்து தமிழகத்தையும், திராவிட முன்னேற்றக் கழகம் அச்சுறுத்தி விடலாம் என எண்ணுவதாக தெரிவித்துள்ள கனிமொழி, இதற்கெல்லாம் பயப்படக்கூடிய இயக்கம் திமுக இல்லையென’ கர்ஜித்திருக்கிறார்.

சென்னை தேனாம்பேட்டை அன்பத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 70வது ஆண்டு விழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுக்கு மற்றும் திமுக துணை பொது செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.

அவர் பேசும்போது, ‘‘ இன்று இருக்கக்கூடிய நிலையில் மத்திய பாஜக அரசின் தாக்குதலால் பாதிக்கப்படுவது மக்கள் மட்டும் இல்லை. அரசியலமைப்பு சட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது என்றால் அது மிகை இல்லை. ஜனநாயகத்தின் மீதும் அரசியல் அமைப்பு பிரதிநிதிகளின் மீதும் என்ன மரியாதை இருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்று மணிப்பூர் எரிந்து கொண்டிருக்கிறது ஆனால் அதைப் பற்றி பேசக்கூடிய இடத்தில் இருக்கிற ஒருவர் தன்னுடைய பெருமைகளை பேசிக் கொண்டிருக்கிறார். கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல், பற்றி எரியக்கூடிய நிலையில் இன்றைக்கு வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிற சூழல் தான் உள்ளதாக விமர்சித்தார். இதற்கு என்ன காரணம் என்றால் மத அடிப்படையில் இருக்கக்கூடிய காழ்ப்புணர்ச்சி தான்.

பிஜேபி ஆட்சி செய்து கொண்டிருக்கிற எல்லா மாநிலத்திலும் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இதை நாடு முழுவதும் கொண்டு வருவதுதான் அவர்களுடைய எண்ணம். இன்றைய அரசியலமைப்பு சட்டம். வாழ்க்கை நம்முடைய பிள்ளைகளுடைய எதிர்காலம், நாம் யார் என்பதை பாதுகாத்துகொள்ள கூடிய அரண்.

இதை மாற்ற வேண்டும் என்பவர்களின் ஆட்சி தொடரும் என்றால் நாட்டிற்கும் நமது எதிர்காலத்திற்கும் எந்த பாதுகாப்பும் இருக்காது. இதையெல்லாம் முறியடிக்க கூடிய வகையில் தான் நேற்று பாட்னாவில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒரு அணியில் திரண்டு ஆட்சியை மாற்ற வேண்டும்.

இந்த ஆட்சி மாற வேண்டும் என எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் அணி திரண்டுள்ளதை நாம் பார்த்தோம் நிச்சயமாக வரக்கூடிய தேர்தலில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட யார் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய துறைகளை வைத்து தமிழகத்தையும் , திராவிட முன்னேற்றக் கழகம் அச்சுறுத்தி விடலாம் என எண்ணுகிறது,திமுக இதற்கெல்லாம் பயப்படக்கூடிய இயக்கம் இல்லை’’ என கனிமொழி பேசினார்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal