அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திமுகவினரின் ஊழல் பட்டியலை ஆளுநரை சந்தித்து கொடுக்க எடப்பாடி பழனிசாமி இன்று மாலை வழங்கவுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறை 8 நாட்கள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. இதனையடுத்து அமலாக்கத்துறை நேரடியாகவே அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டது. சுமார் 17 மணி நேர விசாரணைக்கு பிறகு செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை நேற்று நள்ளிரவு கைது செய்தது.

இந்தநிலையிலை திடீரென ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து மருத்துவமனைகு நேரில் வந்த நீதிபதி செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்தநிலையில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தநிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநர் ரவியை அதிமுக மூத்த நிர்வாகிகளோடு சென்று இன்று மாலை சந்திக்கவுள்ளார். அப்போது திமுக அரசில் நடைபெற்ற ஊழல் தொடர்பான பட்டியல்களை கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையின் போது தமிழக அரசு சட்ட விதிகளை மீறியது தொடர்பாகவும், கைது செய்யப்பட்ட ஒருவரை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்தது தொடர்பாகவும் புகார் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கள்ளச்சாரய மரணம் தொடர்பாக கடந்த மே 22 ஆம் தேதி அதிமுகவினர் பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்து செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் நீக்க வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal