தமிழகத்தில் 4 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்குவதற்கு தமிழக அரசு டெண்டர் விடுத்துள்ளதாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

கடலூர் மாவட்டம் ஆவினங்குடியில் உள்ள வெள்ளாற்றில் மணல் திருடப்படுவதை கண்டித்து கடந்த 2015-ம் ஆண்டு அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கரன் எம்.எல்.ஏ தலைமையில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த வழக்கில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்த பிரிவின் கீழ் சிவசங்கர் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற சிவசங்கரன் எம்.எல்.ஏ., போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். கடலூர் நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் இன்று ஆஜரானார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘‘குன்னம் தொகுதியில் சுடுகாட்டில் மணல் குவாரி அமைத்து மணல் எடுத்து வந்த காரணத்தினால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் இணைந்து நானும் போராட்டம் நடத்தினேன். அப்போது போலீசார் எங்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக இன்று கடலூர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளேன். இதனைத் தொடர்ந்து வருகிற ஜூன் மாதம் 12-ந்தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டு உள்ளனர்.

தமிழகத்தில் போக்குவரத்து கழகத்தில் புதிய தொழிலாளர்கள் பணி நியமனம் செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை வெளியிட்டுள்ளார். அதன் பேரில் முதல் கட்டமாக கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வருங்காலங்களில் 6 அரசு போக்குவரத்து கழகத்தில் முதலமைச்சர் அனுமதி பெற்று போக்குவரத்து தொழிலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட உள்ளனர். கடந்த கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்குவதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டு வந்தது. தற்போது நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் 4 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டு உள்ளன. விரைவில் புதிய பஸ்கள் வாங்கப்படும்.

மத்திய அரசு 15 ஆண்டுகள் உபயோகிக்கப்பட்ட வாகனங்களை பயன்படுத்தக்கூடாது என அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 21 ஆயிரம் பஸ்கள் இயங்கி வரும் நிலையில் 1500 பஸ்கள் 15 ஆண்டுகள் கடந்து உள்ளன. கொரோனா காலத்தில் 2 ஆண்டுகள் பஸ்கள் ஓடவில்லை. புதிய பஸ்கள் வாங்கும் வரையில், இந்த பஸ்கள் வழக்கம் போல் இயங்கும். மேலும், இது தொடர்பாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சரிடம் நான் கோரிக்கை வைத்துள்ளேன். இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளன. அவர்கள் தங்கும் அறையில் குளிர்சாதன வசதி ஏற்படுத்திதர நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் விழுப்புரம் போக்குவரத்து மண்டலத்திற்கு உட்பட்ட கடலூர் அரசு போக்குவரத்து கழகத்தில் குளிர்சாதன தங்கும் அறையினை இன்று திறந்து வைக்க உள்ளேன். பணியாளர்கள் நலனில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்கறை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 2 ஆண்டுகளில் 280 கோடி பெண்கள் இலவசமாக பயணம் செய்துள்ளனர். ஒரு சில இடங்களில் டிரைவர் மற்றும் கண்டக்டர் செய்யும் தவறுக்கு தமிழ்நாடு முழுவதும் இந்த நிலை நீடிக்கிறது என்று கூறுவது தவறு. நல்ல முறையில் இலவச பயணத் திட்டம் செயல்பட்டு வருகின்றது. வெளியூரிலிருந்து பயணம் செய்பவர்களுக்கு உணவுகள் மற்றும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சரியான முறையில் செயல்படாத 2 உணவுகங்கள் மூடப்பட்டுள்ளது’’இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal