கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில், பலர் கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் அஞ்சப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் ஏராளமானோர் கள்ளச்சாராயம் அருந்தி உள்ளனர். அதில் பலருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 7 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், அதே கள்ளச் சாராயத்தை குடித்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதால் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. இதில், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த அமரன் என்பவரைப் போலீசார் கைது செய்ததுடன், மரக்காணம் காவல் ஆய்வாளர் அருள் வடிவேல் அழகன், மதுவிலக்கு கலால் காவல்துறை ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா ஆகிய இருவரையும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இதனையடுத்து, கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 22 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 88 கள்ளச் சாராய வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து 226 லிட்டர் சாராயம் மற்றும் 517 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal