முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 5 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க அனுமதியும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மிழக அமைச்சரவை மாற்றம், நிதி அமைச்சர் பிடிஆர் ஆடியோ வெளியீடு உள்ளிட்டவைகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், துறை வாரியாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் அவற்றை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளிநாட்டு பயணம் குறித்தும், முதலமைச்சரின் ஜப்பான் பயணம் குறித்து கலந்து ஆலோசிக்கபட்டதாகவும் தெரிகிறது.

மேலும் இந்த கூட்டத்தில் பெட்ரோனஸ், காட்டர்பில்லர் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கருணாநிதி நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குடியரசு தலைவர் தமிழகம் வருகை, மதுரை மற்றும் திருவாரூரில் நடைபெற உள்ள கருணாநிதி நூற்றாண்டு விழாக்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal