காவிரி விவகாரம், மேகதாது அணை, உள்ளாட்சித் தேர்தல், நாடாளுன்றத் தேர்தல் என பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசுவதற்கு தமிழகம் வரும் ராகுல் காந்தி, முதல்வர் விஜய்யை சந்திக்காமல் செல்வது ஏன் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
கர்நாடகா உடனான காவிரி பிரச்சினையின் நடுவே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் தமிழக பயணம் கவனம் பெற்றுள்ளது. தமிழக முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு பின் மீண்டும் தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி, முதலமைச்சர் விஜயை சந்திக்காதது பேசு பொருளாகி உள்ளது.
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழ்நாடு வரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று நடைபெறும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கான பயிற்சி நிறைவு முகாமில் கலந்து கொள்கிறார். கூட்டத்தில் 74 மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் பேசும் ராகுல் காந்தி, அவர்களுடன் குடும்பப் புகைப்படம் எடுத்துக்கொண்டு, கலந்துரையாடுகிறார்.
மேலும், முன்னாள் மாநில தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கட்சியின் எதிர்கால செயல்பாடுகள், உள்ளாட்சித் தேர்தல், 2029 நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ராகுல் காந்தியின் தமிழ்நாடு பயணம் கட்சியை மாநிலத்தில் வலுப்படுத்த உதவும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். அதேநேரம், காங்கிரஸ் ஆளும் கர்நாடகா உடனான காவிரி பிரச்சினைக்கு நடுவே அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் தமிழ்நாடு பயணம் கவனம் பெற்றுள்ள நேரத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை, அவர் சந்திக்காமல் செல்வதும் பேசு பொருளாகி உள்ளது.
