“மேகேதாட்டு விவகாரத்தில் தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதல்வர் விஜய். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதல்வர் விஜய். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தோம்.

தமிழகத்துக்கு தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்தகாலத்தில் நாம் பெற்ற படிப்பினை. உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழகத்தைப் பார்க்கிறார்கள்.

ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழகத்தின் புதிய முதல்வர் நினைத்தாரோ என்னவோ… நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார். தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் “நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்” என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள்.

இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்துதான், தமிழகத்தில் உள்ள அனைவரும் எச்சரித்தோம். இனியேனும் தமிழகத்தின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தை முதல்வர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும்.

நமது முதல்வரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதல்வர் அழைப்பு விடுத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத் தனது செயலால் உணர்த்திவிட்டார். முதல்வர் விஜய் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?’’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal