நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டதாக வெளியான தகவல் பரபரப்பை கிளப்பியது.

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் 35 கோடி வரை பேரம் பேசியதாக எழுந்த புகாரில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கரூரில் கனகராஜ் என்பவரின் பைனான்ஸ் அலுவலகத்தில் குதிரை பேரம் தொடர்பான ஆவணங்கள் கிடைத்த‌தால் அந்த அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.

தமிழக அரசியல் சூழல் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக இருந்து வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா, இடைத்தேர்தல் , கட்சி தாவல் என பரபரப்பாகவே நடைபெற்று வரும் நிலையில், தற்போது எம்.எல்.ஏ ஒருவரிடம் நேரடியாக பேரம் பேசியதாகக் கூறப்படும் புகார் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ இளையராஜா, கடந்த ஜூன் 29-ஆம் தேதி சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், சில நாட்களுக்கு முன்பு திருநாவுக்கரசு என்பவர் தன்னை தொடர்புகொண்டதாக கூறியிருந்தார்.

ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீசார் பலரைக் கைது செய்துள்ளனர். முதன்முதலாக கைது செய்யப்பட்ட நாகராஜ், தியாகராஜ் மற்றும் நரேஷ் ஆகிய மூவரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் மூலமாகத்தான் இந்த பேரத்தில் ஈடுபட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.வை ஆட்சிக்கு எதிராக செயல்பட வைப்பதற்காக உயர்பதவியும், ரூ.35 கோடி வரையிலான பணமும் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டின் உண்மை நிலையை கண்டறிய காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரணையை விரிவுபடுத்தியது. மேலும், இது தொடர்பாக இதுவரை 10க்கும் மேற்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனவே செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். ஆனால், அவர்கள் இருவரும் தலைமறைவானார்கள். எனவே, அவர்கள் இருவருக்கும் காவல்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்றனர். இந்த நிலையில் தவெக எம்எல்ஏக்களிடம் ஹவாலா முறை மூலம் பணம் கைமாற திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

இதனையத்து மத்திய விசாரணை அமைப்பான அமலாக்கத் துறையும் விசாரணையை கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக விரைவில் சோதனையும், கைது நடவடிக்கையும் எடுக்கலாம் என எதிர்பார்ப்பதால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தவெக ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசிய விவகாரத்தில் கரூரில் கனகராஜ் என்பவரின் பைனான்ஸ் அலுவலகத்தில் குதிரை பேரம் தொடர்பான ஆவணங்கள் கிடைத்த‌தால் அந்த அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.

மேலும், சென்னை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, ஒரு தவெக விலிகி-விற்கு ரூ.35 கோடி லஞ்சம் வழங்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் புலன்விசாரணையின் அடிப்படையில், சூளைமேட்டில் உள்ள தீபம் பைனான்ஸ் நிறுவனத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அச்சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.2,82,49,000/- ரொக்கம் கைப்பற்றப்பட்டது. விசாரணையில், இந்த தொகை தவெக எம்.எல்.ஏ.விற்கு வழங்கப்படவிருந்த முன்பணமாக ஏற்கனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களால் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ இவ்வாறு சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal