சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், விஜய் மற்றும் தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குளறுபடிகள் இருப்பதாகவும், அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரியும் திமுக வேட்பாளர் ஆர்.டி சேகர் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியை தக்க வைத்துக்கொண்டர்.
தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக வென்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், பெரம்பூர் தொகுதியில் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குளறுபடிகள் இருப்பதாகவும், அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் எனவும் பெரம்பூர் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.டி சேகர் மற்றும் பெரம்பூர் தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் விஜய், தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என்று ஆர்டி சேகர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வர் விஜய் மற்றும் தேர்தல் அதிகாரிக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் 1,20,365 வாக்குகள் பெற்று 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் ஆர்.டி சேகர் 66,650 வாக்குகள் பெற்றார். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. பாமக சார்பில் போட்டியிட்ட திலகபாமா 8,561 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பெற்றார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வெற்றி தமிழன் 5,114 வாக்குக்ள் பெற்று இருந்தார்.
