தமிழக அரசியல் வரலாற்றில் திமுக இன்று அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது. சென்னை கோட்டையில் ஓட்டை விழுந்ததை திமுக தலைமை கடைசி வரை கவனிக்கவில்லையா? 2026 தேர்தல் முடிவுகள் திராவிட அரசியலின் அஸ்திவாரத்தையே ஆட்டிப் பார்த்துள்ளன. ‘அடுத்த நாமதான்’ என்று டேட்டா கொடுத்த தேர்தல் வியூக நிறுவனங்கள், ஸ்டாலினை நடுரோட்டில் கைவிட்டது எப்படி? திமுக தோல்விக்கு என்னதான் காரணம்?

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 தேர்தல் முடிவுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல; அது அரை நூற்றாண்டு கால தி.மு.க & – அ.தி.மு.க அரசியலை அடியோடு உலுக்கிய ஒரு நிகழ்வு. குறிப்பாக, திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே தோல்வியடைந்தது சாதாரண விஷயம் இல்லை. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வி.எஸ். பாபுவின் வெற்றி, ஏதோ ஒரு அலையில் வந்தது கிடையாது. அது வாக்காளர்களிடம் நீண்டகாலமாகத் தேங்கிக் கிடந்த அதிருப்தியின் வெளிப்பாடு. ஒரு முதலமைச்சர் தனது சொந்த தொகுதியிலேயே வீழ்ந்திருக்கிறார் என்றால், தமிழக வாக்காளர்கள் எவ்வளவு அமைதியாக ஒரு புரட்சியை நிகழ்த்துவார்கள் என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் தேவையில்லை. இதுதான் இன்றைய கசப்பான நிதர்சனம்.
தோல்விக்கான காரணங்களை மேலோட்டமாகப் பார்க்காமல் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால், ஆட்சி மீதான சலிப்பு தெரிகிறது. கடந்த 5 ஆண்டுகளில் அரசு போட்ட விளம்பரங்கள் எக்கச்சக்கம். ஆனால் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள்தான் மக்களை திணறடித்துவிட்டன. ‘‘நாங்கள் எதைச் செய்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்’’ என்கிற அந்த அதீத நம்பிக்கைதான் இன்று திமுகவை இந்த நிலைக்கு தள்ளியுள்ளதாக தெரிகிறது. அதுவும் அமைச்சர்களின் மெத்தனமும், அதிகாரிகளின் ஆணவப் போக்கும், அடிமட்டத் தொண்டர்களை மதிக்காத போக்கும், அந்த கட்சியின் வெற்றி வாய்ப்புகளை குழிதோண்டி புதைத்துவிட்டன.
இந்த தேர்தலில் திராவிடக் கட்சிகளுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்தது இளைஞர்களின் வாக்குகள்தான். பல ஆண்டுகளாக திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுக்குள்ளேயே சுழன்று கொண்டிருந்த ஓட்டுகள், இந்த முறை விஜய் பக்கம் கச்சிதமாகத் திரும்பியுள்ளன. சாதி, மத எல்லைகளைத் தாண்டி ஒரு புதிய அரசியலை எதிர்பார்த்து நின்ற நகர்ப்புற வாக்காளர்களும், படித்த இளைஞர்களும் விஜய்யை ஒரு மாற்றமாகப் பார்த்துள்ளனர். இது வெறும் சினிமா கவர்ச்சி மட்டுமே கிடையாது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் என திமுகவின் கோட்டைகளாக சொல்லப்பட்ட இடங்களிலேயே த.வெ.க. புகுந்து விளையாடியிருப்பது, திராவிட அரசியலின் அஸ்திவாரத்தையே ஆட்டிப் பார்த்திருக்கிறது.
திமுக தலைமை செய்த மாபெரும் தவறு என்ன தெரியுமா, கள நிலவரத்தை விடவும் கார்ப்பரேட் பாணி தேர்தல் வியூக நிறுவனங்களை மட்டுமே நம்பியதுதான். வாக்காளர்களின் மனநிலையைப் புரியாமல் ‘டேட்டா’ மட்டும் பார்த்துப் போட்ட வியூகங்கள். காகிதத்தில் சரியாக தோன்றின. ஆனால் தரையில் அவை எடுபடவே இல்லை. இதுதான் உண்மை. மக்களிடம் செல்வாக்கு இழந்த பல சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் யாரையும் மதிக்காத அமைச்சர்கள் பலருக்கு மீண்டும் சீட் கொடுத்தது, கட்சியின் மூத்த நிர்வாகிகளின் அனுபவத்தை புறந்தள்ளியது போன்றவை தலைமையின் பலவீனத்தையே அம்பலப்படுத்தியுள்ளன.
எப்படி பார்த்தாலும் இந்த 2026 தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு ஒரு கசப்பான மருந்து. அதிகாரம் மக்கள் தருவது தான். ஆனால் அவர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் தெரியும்.,. அதுதான் நேற்று நடந்தள்ளது.. இது ஒரு பாடமாக அமையட்டும். இனி வெறும் மேனேஜ்மென்ட் அரசியல் செல்லுபடியாகாது என்பதை தமிழகம் நிரூபித்துவிட்டது. இது வெறும் தேர்தல் முடிவு மட்டுமே அல்ல, திராவிடக் கட்சிகளுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கை மணி.
இனி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காதவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு அரியணையில் இடமில்லை. அது முதலமைச்சராக இருந்தாலும் சரி..!! என்பதை மௌனப் புரட்சியின் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் மக்கள்!
